Published : 19 Sep 2021 11:40 AM
Last Updated : 19 Sep 2021 11:40 AM

ஐபிஎல் 2021:  2-வது கட்ட போட்டிகள் இன்று தொடக்கம்: ரசிர்கள் பங்கேற்க என்னென்ன கட்டுப்பாடுகள்?

துபாய்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2-வது கட்ட ஐபிஎல் டி20 லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகின்றன. 27 நாட்கள் நடக்கும் போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரே நாளில் இரு ஆட்டங்கள் 7 முறை நடக்கின்றன.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தபோட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதிலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

துபாய்

துபாய் மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள் கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு செல்ல தேவையில்லை. ஆனால், கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தியிருப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

அபுதாபி

அபுதாபி மைதானத்தில் ரசிகர்களில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ், கொனா பரிசோதனை சான்றிதழ் என இரண்டும் வைத்திருக்க வேண்டும்.

12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் தேவையில்லை. ஆனால், கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழ் அவசியம்.

சார்ஜா

சார்ஜாவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழுடன், 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை சான்றிதழ் அவசியம். அதுபோலவே முகவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x