Published : 18 Sep 2021 05:30 PM
Last Updated : 18 Sep 2021 05:30 PM

நியூசிலாந்து செய்ததை எந்த நாடும் மற்ற நாட்டுக்குச் செய்யாது: இன்சமாம் உல் ஹக்

பாகிஸ்தானுடனான போட்டியை நியூசிலாந்து ரத்து செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், நியூசிலாந்து செய்ததை எந்த நாடும் மற்ற நாட்டிற்குச் செய்யாது என்றும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக திடீரென ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ராவல் பிண்டியில் முதல் ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற இருந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நியூசிலாந்து அரசு எச்சரிக்கை செய்ததையடுத்து தொடர் ரத்து செய்யப்பட்டது.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைப் பெரும் சிக்கலில் விட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறும்போது, “நியூசிலாந்து செய்ததை எந்த நாடும் மற்ற நாட்டிற்குச் செய்யாது. பாகிஸ்தான் எப்போதும் பிற நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும். 1996ஆம் ஆண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி இலங்கைக்குச் செல்ல பிற அணிகள் தயங்கின. ஆனால், பாகிஸ்தான் இலங்கை சென்று கிரிக்கெட் விளையாடியது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல் இருந்தால் நியூசிலாந்து அதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க ஏன் மறுக்கிறது? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் காட்டவில்லை என்றாலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் காட்டலாம். எங்களுடைய பிரதமர் இது தொடர்பாகப் பேசினார். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு உறுதியும் அளித்தார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் முன்பே தெரிவிக்க வேண்டும். போட்டிக்கு முந்தைய நாள் நியூசிலாந்து தெரிவிக்கிறது. நாங்கள் பாகிஸ்தானின் பாதுகாப்பு குறித்து உறுதி கொண்டுள்ளோம். குறைந்தபட்சம் என்ன பிரச்சனை என்றாவது கூறுங்கள். நியூசிலாந்து செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x