Published : 17 Sep 2021 04:16 PM
Last Updated : 17 Sep 2021 04:16 PM

போட்டி தொடங்க சில நிமிடங்களுக்கு முன்: பாகிஸ்தான் தொடரை திடீரென ரத்து செய்தது நியூஸிலாந்து

படம் உதவி: ட்விட்டர்.

ராவல்பிண்டி

பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக திடீரென ரத்து செய்வதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

ராவல்பிண்டியில் இன்று பிற்பகல் முதல் ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற இருந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நியூஸிலாந்து அரசு எச்சரிக்கை செய்ததையடுத்து தொடர் ரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தானுக்குப் பயணம் செய்துள்ள நியூஸிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டி நகரில் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட இருந்தது. ஆனால், போட்டி தொடங்க சில மணி நேரத்துக்கு முன் தொடரை ரத்து செய்வதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதுகுறித்து நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “ பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சம், நியூஸிலாந்து பாதுகாப்பு ஆலோசகர்களின் அறிவுரை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானுடனான தொடரைத் தொடர முடியாது. ஆதலால், தொடரை ரத்து செய்து உடனடியாக நியூஸிலாந்து வீரர்கள் நாடு திரும்புவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.

நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் வொயிட் கூறுகையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்குப் பெரும் இழப்பு ஏற்படும் என்பதை அறிவேன். ஆனால், வீரர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். தொடரை ரத்து செய்வதுதான் ஒரே வாய்ப்பாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

கடந்த 2002-ம் ஆண்டு கராச்சி நகரில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் வெடிகுண்டு வெடித்ததையடுத்து, அப்போது தொடரை நியூஸிலாந்து அணி ரத்து செய்தது. அதன்பின் 2003-ம் ஆண்டு பாகிஸ்தானுக்குப் பயணம் செய்து ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து அணி கடைசியாக விளையாடியது. அதன்பின் கடந்த 18 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு நியூஸிலாந்து அணி பயணம் செய்யவில்லை.

நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைப் பெரும் சிக்கலில் விட்டுள்ளது. இங்கிலாந்தின் ஆடவர், மகளிர் அணி அடுத்த மாதம் பாகிஸ்தான் வர இருக்கும் நிலையில் நியூஸிலாந்து அணி தொடரை ரத்து செய்த முடிவு அந்தத் தொடரையும் பாதிக்கும். பாதுகாப்புக் காரணங்கள், அச்சுறுத்தலைக் கூறி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடரை ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது.

நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வட்டாரங்கள் கூறுகையில், “நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தன்னிச்சையான முடிவு. நியூஸிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் எங்களிடம் பேசுகையில் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் வந்திருப்பதாகக் கூறி தன்னிச்சையாகத் தொடரை ரத்து செய்ய முடிவு செய்துள்ளார்கள் .

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், எங்கள் நாட்டு அரசு முழுமையான பாதுகாப்பு அளிக்கிறது. பாதுகாப்புக்கு உறுதியளித்துள்ளோம். பிரதமர் இம்ரான்கான், தனிப்பட்ட முறையில் நியூஸிலாந்து பிரதமருடன் பேசியுள்ளார். சிறப்பான உளவுத்துறை இருப்பதால், எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் வராது என்று உறுதியளித்துள்ளார். பாகிஸ்தான் அரசு செய்த பாதுகாப்பு ஏற்பாடுகளை நியூஸிலாந்து பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்து ஆய்வுசெய்து மனநிறைவு அடைந்தபின்புதான் தொடருக்கு நியூஸிலாந்து வீரர்கள் வந்தனர்” எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x