Last Updated : 13 Sep, 2021 03:33 PM

 

Published : 13 Sep 2021 03:33 PM
Last Updated : 13 Sep 2021 03:33 PM

மான்செஸ்டர் டெஸ்ட் ரத்தாக ஐபிஎல் தொடர் ஒரு காரணமா?- என்ன சொல்கிறார் சவுரவ் கங்குலி

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி | கோப்புப்படம்

புதுடெல்லி

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் நடக்க இருந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்தாக ஐபிஎல் டி20 தொடர் ஒரு காரணமாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதில் அளித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடக்க இருந்தது. ஆனால், இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பரம்பருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் டாஸ் போடுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே அணியின் பிசியோ பரம்பருக்கு கரோனா தொற்று ஏற்படுவதற்கு சில நாட்களுக்குமுன்புதான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் பயோ-பபுள் சூழலுக்குள் இருந்து போட்டிகளில் பங்கேற்று வந்தும் கரோனா தொற்று ஏற்பட்டது.

கடந்த மாதம் 31-ம் தேதி லண்டனில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி ஆகியோர் பயோபபுள் சூழலை மீறி பங்கேற்றனர். அந்தப் புத்தக விழாவுக்குச் சென்றுவந்த 2 நாட்களில் ரவிசாஸ்திரிக்கு கரோனா தொற்று உறுதியானது. அவருடன் நெருக்கமாக இருந்ததற்காக பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஸ்ரீதர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே இந்திய அணியின் பிசியோ யோகேஷ் பராமருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதால் மான்செஸ்டரில் நடக்க இருந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டது.

பயோ-பபுள் சூழலை ரவி சாஸ்திரி மீறியதுதான் அணிக்குள் கரோனா தொற்று ஏற்பட காரணம் என்றும், ஐபிஎல்டி20 தொடரில் பங்கேற்க வீரர்கள் ஆர்வமாக இருந்ததால், கடைசி டெஸ்டில் பங்கேற்று யாருக்கேனும் தொற்று ஏற்படலாம் என்ற அச்சத்தில் விளையாடவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் எந்தவிதமான அதிகாரபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, தி டெலிகிராப் நாளேட்டுக்கு விளக்கமாகப் பதில் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில் “ அணியின் பிசியோ பரம்பருக்கு தொற்று இருப்பது தெரிந்தபின் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் அச்சமடைந்தனர். வீரர்கள் 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவும் மறுத்துவிட்டனர். இதற்கு வீரர்களை நாம் குறை கூற முடியாது. பிசியோ யோகேஷ் பரம்பர் வீரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். நிதின்படேல் தனிமைப்படுத்தப்பட்ட பின் அனைத்து வீரர்களுடனும் பரம்பர் எளிதாகப் பழகினார்.

இதனால்தான் இந்திய வீரர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. தாங்களும் பரம்பருடன் நெருங்கிப் பழகினோமே, தங்களுக்கும் கரோனா வந்துவிடுமோ என்று வீரர்கள் அச்சமடைந்துவிட்டனர்.

டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ஏராளமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது இது எளிதானதாக இல்லை. இந்த விவகாரம் சற்று குளிர்ந்தவுடன் அடுத்தகட்டம் குறித்து ஆலோசிப்போம். கடைசி டெஸ்ட் போட்டிரத்தானதற்கும் ஐபிஎல் தொடருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. பொறுப்பற்றமுறையில் பிசிசிஐ ஒருபோதும் செயல்படாது, மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் நலனிலும் பிசிசிஐ அதிக அக்கறை வைத்துள்ளது.

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x