Published : 13 Sep 2021 11:38 AM
Last Updated : 13 Sep 2021 11:38 AM

பதவி விலகுகிறாரா விராட் கோலி? உலகக் கோப்பைக்குப்பின் ஒருநாள், டி20 அணிக்கு  கேப்டனாக ரோஹித் சர்மா?

ரோஹித் சர்மா, விராட் கோலி | கோப்புப்படம்

மும்பை


ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபின், இந்திய அணியின் டி20,ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக திட்டமிட்டுள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருநாள், டி20 அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கோலி கேப்டனாகத் தொடர்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, மே.இ.தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்பிரி்க்கா ஆகிய அணிகளில் டெஸ்ட் மற்றும் டி20, ஒருநாள் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேப்டனாக இருப்பவர் அனைத்துப் பிரிவுகளையும் சமாளிப்பதும், சரியான கலவையில் அணியைத் தேர்வு செய்வதும் பலநேரங்களில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இந்த முறை கொண்டு வரப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டுவரை இந்த முறைதான் இந்திய அணியிலும் இருந்தது. டெஸ்ட் அணிக்கு அனில் கும்ப்ளே கேப்டனாகவும், ஒருநாள்,டி20 போட்டிகளுக்கு தோனி கேப்டனாகவும் இருந்தார். ஆனால், தோனி கேப்டன் பதவியைத் துறந்தபின், அனைத்து பிரிவுகளுக்கும் கோலியே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

3 பிரிவுகளுக்கும் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டாலும் சிறிதுகூட தனது பேட்டிங்கில் தொய்வில்லாமல் பல நேரங்களில் அணிக்கு வெற்றி தேடித்தந்து, பொறுப்புள்ள கேப்டனாக இருந்துள்ளார்.

கோலி இதுவரை 95 ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை வகித்து அதில் 65 போட்டிகளில் வெற்றியும், 27 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளார். ஒரு போட்டி டைட் ஆகவும், 2 ஆட்டங்கள் முடிவில்லாமல் இருக்கிறது.

45 டி20 போட்டிகளுக்கு தலைமை ஏற்றுள்ள கோலி, அதில் 29 வெற்றிகளும், 14 தோல்விகளையும் கண்டுள்ளார். 2 போட்டிகளில் முடிவு ஏதும் இல்லை. 65 டெஸ்ட் போட்டிகளில் தலைமை ஏற்ற கோலி, அதில் 38 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

3 பிரிவுகளுக்கும் கேப்டனாக இருப்பதன் சிரமம், அழுத்தம், நெருக்கடி குறித்து பலமாதங்களாக ரோஹித் சர்மாவுடனும், அணி நிர்வாகத்துடன் கோலி ஆலோசனை நடத்தியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலிய பயணத்துக்குப்பின் கோலியின் ஆலோசனை தீவிரமடைந்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில் “டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபின் இந்திய அணியின் கேப்டன்ஷிப்பில் மாற்றம் வரும். ஒருநாள், டி20 போட்டிகளுக்கு தனியாக கேப்டன் நியமிக்கப்படுவார். ரோஹித் சர்மாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்து, கோலி பேட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளார்” என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2019-ம்ஆண்டிலிருந்து கோலியின் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு ஃபார்ம் இல்லை, குறிப்பாக கடைசியாக 50 இன்னிங்ஸ்களாக கோலி ஒரு சர்வதேச சதம்கூட 3 பிரிவுகளிலும் கோலி அடிக்கவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தபின் கோலி இதுவரை டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கவில்லை. உலகத் தரம்வாய்ந்த பேட்ஸ்மேன் கோலியின் பேட்டிங்கிற்கு இதுபோன்ற பின்னடைவுகள், பெரும் அழுத்தத்தை கொடுத்தன.

வெற்றிகரமான கேப்டனாக கோலி வலம்வந்தாலும், குறிப்பாக ஐசிசி தொடர்பான எந்த முக்கியப் போட்டியிலும் இந்திய அணிக்கு கோலியால் கோப்பையைவென்று கொடுக்க முடியவி்ல்லை. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அணி வீரர்கள் குறித்தும் பிசிசிஐக்கு கோலி மீது கடும் அதிருப்தி இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி அணிக்கு 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்தும் கோலியால் ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க முடியவில்லை. இது கோலியின் கேப்டன்ஷிப் மீதான அழுத்தத்தையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.

அதேசமயம், ரோஹித் சர்மா இந்திய அணிக்கு 10 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து அதில் 8 வெற்றிகளையும், 19 டி20 போட்டிகளில் 15 வெற்றிகளையும் பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துவரும் ரோஹித்சர்மா 123போட்டிகளில் 74 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார், 3 முறை சாம்பியன்பட்டத்தையும் வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் டெஸ்ட் அணிக்கு கும்ப்ளேயும், ஒருநாள், டி20 அணிக்கு தோனியும் கேப்டனாக இருந்தபோது, எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் செயல்பட்டதும், ஸ்பிலிட் கேப்டன்ஸி முறை சரியாக இருந்ததையும் உணர்ந்து இப்போது மீண்டும் அந்த முறை கொண்டுவரப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x