Published : 12 Sep 2021 04:19 PM
Last Updated : 12 Sep 2021 04:19 PM

பிரிட்டன் முழுவதும் திறந்துகிடக்கிறது: ரவி சாஸ்திரி காட்டம்

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி | கோப்புப்படம்

லண்டன்


பிரிட்டன் முழுவதும் கட்டுப்பாடுகளின்றி திறந்து கிடக்கிறது, கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றால் முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றது. வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் பயோ-பபுள் சூழலுக்குள் இருந்து போட்டிகளில் பங்கேற்று வந்தனர்.

ஆனால், கடந்த மாதம் 31-ம் தேதி பயோ-பபுள்சூழலை மாறி லண்டனில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோர் பங்கேற்றார்.

அந்தப் புத்தக விழாவுக்குச் சென்றுவந்த 2 நாட்களில் அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அவருடன் நெருக்கமாக இருந்ததற்காக பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஸ்ரீதர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டரில் நடக்க இருந்த நேரத்தில் இந்திய அணியின் பிசியோ யோகேஷ் பராமருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதால் ஆட்டம் காலவரையின்றித் தள்ளி வைக்கப்பட்டது.

ஆனால், இந்திய அணிக்குள் கரோனா பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக கடந்த 4 போட்டிகளாக தீவிரமான பயோ-பபுள் சூழலுக்குள் வீரர்கள், ஊழியர்கள் இருந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டிக்கு அனைவரும் பயோ-பபுள் சூழலை மீறியது தெரியவந்துள்ளது.

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பயோ-பபுள் சூழலை மீறிப் புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றுவந்து அணிக்குள் கரோனாவைப் பரப்பிவிட்டார். மேலும், மான்செஸ்டர் நகரில் இந்திய வீரர்கள் அனைவரும் எந்தவிதமான பயோ-பபுள் சூழலையும் மதிக்காமல் வெளியே நடமாடியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்திய அணிக்குள் கரோனா பரவக் காரணமாக இருந்தது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலியின் செயல்பாடுகள் எனத் தெரிந்தபின் பிசிசிஐ வாரியம் கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் புத்தக வெளியி்ட்டு விழாவுக்குச் சென்றுவந்ததால்தான் கரோனா பரவல் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் ஆங்கில நாளேடு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது:

பிரிட்டன் முழுவதும் கட்டுப்பாடுகளின்றி திறந்து கிடக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வேண்டும் என இருந்தால், முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஏற்பட்டிருக்கும். உறுதியாக இந்திய அணியிடம் இருந்து இந்தக் கோடை காலசீசன் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கும் சிறந்ததாக இருந்திருக்கும். கரோனா காலமாக இருந்தாலும்கூட, சிறந்த கோடைக்காலமாக இருந்தது. இந்திய அணி வீரர்கள் தேம்ஸ் நதியின் இரு புறங்களிலும் சிறப்பாக விளையாடினார்கள்.

கரோனா காலத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் எந்த அணியும் இந்திய அணி போல் விளையாடியதில்லை. வேண்டுமென்றால் கிரிக்கெட் வல்லுநர்களிடம் கேளுங்கள். இந்தவிளையாட்டில் எனக்கு கிரிக்கெட்டைத் தவிர வேறு ஏதும் மனநிறைவைத்தரவில்லை. உங்களுக்குத் தெரிந்தவரை சிறிதுகாலம் மட்டுமே நான் கிரிக்கெட்டில் இருந்திருக்கிறேன்

இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x