Last Updated : 12 Sep, 2021 03:35 PM

 

Published : 12 Sep 2021 03:35 PM
Last Updated : 12 Sep 2021 03:35 PM

அஸ்வினை உள்ளடக்கியதுதான் சிறந்த இந்திய அணி; ப்ளேயிங் லெவனில் அவர் எப்போதும் தேவை: இயான் சேப்பல் அறிவுரை

இந்திய அணியின் நடுவரிசையை வலுப்படுத்துவது அவசியமானது. அதற்கு எப்போதும் ப்ளேயிங் லெவனில் அஸ்வின் இடம் பெறுமாறு செய்வதற்கு வழியை ஆராய வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் அஸ்வினுக்கு இடம் வழங்கப்படவில்லை. 4 வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற ரீதியில் ஜடேஜாவுக்கு மட்டும் கேப்டன் கோலி வாய்ப்பு வழங்கினார்.

டெஸ்ட் போட்டியில் உலகின் நம்பர் 2 பந்துவீச்சாளராக அஸ்வின் இருந்தும் அவருக்கு வாய்ப்புவழங்காத கோலியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறுமுன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த சூழலில் கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் ஒருநாள், டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அஸ்வின், டி20 உலகக் கோப்பைக்கான இந்தியஅணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் நடுவரிசையை பலப்படுத்த ப்ளேயிங் லெவனில் எப்போதும் அஸ்வின் இருக்குமாறு செய்யும்வழியைத் தேடுங்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் அறிவுறுத்தியுள்ளார். கிரிக்இன்போ தளத்தில் அவர் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:

இந்திய அணி அனைத்து துறைகளிலும் சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர், டி20 தொடர் வெற்றி, உள்நாட்டில் வீழ்த்த முடியாத அணியாகவும் இருக்கும் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் முன்னிலை என தனது திறமைைய நிரூபித்து வருகிறது.

அவர்களால் திறமையை மேம்படுத்த முடிாயது எனக் கூறிவிட முடியாது. முதலிடத்தில் இருக்கும் அணிகள், முதலிடத்தை நோக்கி நகரும்அணிகள் தங்களை இப்படித்தான் பட்டைத் தீட்டிக்கொள்வார்கள்.

கடந்த 1920-களில் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஹெர்பி கோலின்ஸ் அடிக்கடி கூறுவது அணித் தேர்வில் மிகமுக்கியமானது, சரியான வீரர்களைத் தேர்வு செய்வதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வினை உள்ளடக்கியதுதான் சிறந்த இந்திய அணி. அனைத்து சூழலுக்கும் ஏற்ப அஸ்வின் சிறப்பாக பந்துவீசக்கூடியவர். ஆஸ்திரேலியாவில் அஸ்வின் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆதலால், இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் எப்போதும் அஸ்வின் இருக்குமாறு செய்ய வழியை தேட வேண்டும்.

ஓவல் டெஸ்டில் நடுவரிசையில் வலது, இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு சரியான நடுநிலையை உருவாக்க முயற்சி செய்து ஜடேஜாவை களமிறக்கினார்கள். ஆனால், அது தீர்வாக அமையவில்லை. 5-வதாக களமிறங்கும் பேட்ஸ்மேன் இடத்தில் ஜடேஜா தன்னை நிரூபிக்காத பட்சத்தில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தேவைப்படுவார். அந்த வகையில் முதல் தேர்வு ஹர்திக் பாண்டியாவும், அடுத்ததாக ஷர்துல் தாக்கூரும் இருப்பார்கள்.

சிறப்பான ேதர்வு என்பது ஒரு கலை, ஒரு டாப்-கிளாஸ் அணி தொடர்ந்து சிறப்பாக சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிபெற, சரியான வீரர்களைத் தேர்வு செய்யும் வழிகளை ஆராய வேண்டும். எப்போதுமே அடுத்தடுத்து போட்டிகளை வெல்ல முன்னுரிமை அளிக்க வேண்டும், இந்திய அணியில் நடுவரிசையை பலப்படுத்த அஸ்வினை சேர்ப்பதற்கு தேர்வாளர்கள் முன்னிரிமை அளிக்க வேண்டும். விராட் கோலி தலைமையிலான அணி தன்னை மேலும் முன்னேற்றிக் கொள்ளக்கூடியது என்ற செய்தியே மற்ற அணிகலுக்கு பெரிய அச்சம்தான்.

நடுவரிசையில் ஜடேஜா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் மூலம் ஓரளவுக்கு நல்ல ரன்களை எதிர்பார்க்கலாம். அதைத் தொடர்ந்து 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கலாம். இதுதான் வலிமையான, சரிசமமான தாக்குதல் அணியாக அமையும். வெற்றியைத் துரத்துவதற்கு அதிகமான ரன்களை அடிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. டெஸ்ட் போட்டியில் வெல்வதற்கு எளிதான சூத்திரம் என்பது, பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்காக பேட்ஸ்மேன்கள் விரைவாக ஸ்கோர் செய்ய வேண்டும்.

நடுவரிசையில் வீரர்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். திறமையின் அடிப்படையில் ரிஷப்பந்த் 5-வது இடத்திலும் விளையாடக் கூடியவர், சூழலுக்கு ஏற்ப நிதானமாகவும், பொறுமையாகவும் விளையாடுவார். நீண்டநேரம் களத்தில் நிற்க வேண்டுமென்றால், ஜடேஜாவை களமிறக்கலாம்.

விரைவாக ஸ்கோர் செய்வதற்கும், தேவைப்பட்டால் 5-வது இடத்தில் ஹர்திக் பாண்டியாவை களமிறக்கலாம். ஆனால், ரஹானே கடந்த காலங்களில் மோசமான பேட்டிங்கால் தனக்குரிய இடத்தை இழந்துவிட்டார். ரோஹித் சர்மா கேப்டனாகவும், துணைக் கேப்டனாகவும் செயல்படக்கூடிய தகுதியைப் பெற்றுவிட்டார்.

இவ்வாறு சேப்பல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x