Published : 12 Sep 2021 12:57 PM
Last Updated : 12 Sep 2021 12:57 PM

கிரிக்கெட்டில் வினோதம்: மைதானத்துக்குள் புகுந்த நாய் பந்தை கவ்விக் கொண்டு ஓடியதால் ஆட்டம் நிறுத்தம்

பந்தைக் கவ்விக் கொண்டு ஓடிய நாயை துரத்திப் பிடிக்க ஓடிய வீராங்கனை | படம் உதவி ட்விட்டர்

பெல்பாஸ்ட்

கிரிக்கெட் போட்டி நடக்கும் போது ரசிகர்கள் அத்துமீறி நுழைந்து வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவது,புகைப்படம் எடுப்பது, பேசுவது போன்ற சம்பவங்களைத்தான் இதுவரை கேட்டிருந்தோம். ஆனால், ஒரு நாய் உள்ளே புகுந்து பந்தை எடுத்துச்சென்ற வினோதமான சம்பவம் அயர்லாந்தில் நடந்துள்ளது.

பெல்பாஸ்ட் நகரில் அயர்லாந்து உள்நாட்டு மகளிர் டி20 போட்டிகள் நடந்து வருகின்றன. பிரடி மற்றும் சிஎஸ்என்ஐ அணிகளுக்கு இடையிலான அரையிறுதிஆட்டம் நேற்று நடந்தது.

மழை காரணமாக ஆட்டம் தடைபட்டு டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 12 ஓவர்களில் 74 ரன்கள் அடிக்க சிஸ்என்ஐ இலக்குநிர்ணயிக்கப்பட்டது. சிஎஸ்என்ஐ அணி 6 விக்கெட் இழப்புக்கு 47ரன்கள்சேர்த்திருந்தது. 21 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இக்கட்டான கட்டத்தில் சிஎஸ்என்எல் அணி இருந்தது.

9 வது ஓவரை பிரெடி அணி பந்துவீச்சாளர் வீசினார், வீராங்கனை அபி லெக்கி பேட்டிங் செய்தார். 3-வது பந்தை வீசியபோது அபி லெக்கி பந்தை தேர்டு மேன் திசையில் தட்டிவிட்டு ஒரு ரன் ஓடினார்.

தேர்டுமேன் திசையில் இருந்த பீல்டர் பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் ராச்செல் ஹெப்பர்னிடம் வீசினார். அப்போது பார்வையாளர் மாடத்திலிருந்து ஒரு நாய் மைதானத்துக்குள் புகுந்தது. பந்தைப் பிடித்து விக்கெட் கீப்பர் ஹெப்பர்ன் ஸ்டெம்பில் அடிக்க முயன்றபோது பந்து தவறியது.

இதைப் பார்த்த அந்த நாய் பந்தைக் கவ்விக் கொண்டு மீண்டும் பார்வையாளர் மாடத்தை நோக்கி ஓடியது. இதைப் பார்த்த மைதானத்தில் இருந்த வீராங்கனைகள், பார்வையாளர்கள் அனைவரும் சிரித்தனர். நாயிடம் இருந்து பந்தை வாங்கி, வீராங்கனை ஒருவர் நாயை உரிமையாளரிடம் வழங்கிவிட்டு திரும்பினார். நாய் பந்தை எடுத்து ஓட்டம் பிடித்த சம்பவத்தால் சிலநிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x