Last Updated : 11 Sep, 2021 06:59 PM

 

Published : 11 Sep 2021 06:59 PM
Last Updated : 11 Sep 2021 06:59 PM

5-வது டெஸ்ட் ரத்து: பணமும், ஐபிஎல் தொடரும்தான் காரணம்: மைக்கேல் வான் வறுத்தெடுப்பு

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் ரத்து செய்யப்பட்டதற்குப் பணமும், ஐபிஎல் டி20 தொடரும்தான் காரணம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் நடக்க இருந்த கடைசி டெஸ்ட் போட்டி கரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அணியின் பிசியோவுக்கும் தொற்று உறுதியானது.

இதையடுத்து, மான்செஸ்டரில் நடக்க இருந்த 5-வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டி பின்னர் நடத்தப்படும் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டு, இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், 'தி டெலிகிராப்' நாளேட்டில் 5-வது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது குறித்து கடுமையாக விமர்சித்துக் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து நேர்மையாகச் சொல்வதென்றால் எல்லாம் பணமும், ஐபிஎல் தொடரும்தான் காரணம். வீரர்கள் தங்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும் என அஞ்சியதால்தான் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் டி20 தொடர் போட்டிகளைப் பார்க்கப் போகிறோம், வீரர்கள் சிரித்த முகத்துடன், மகிழ்ச்சியுடன் மைதானத்தை வலம் வருவார்கள். ஆனால், அவர்கள் பிசிஆர் பரிசோதனையில் நம்பிக்கை வைக்க வேண்டும். கரோனா வைரஸைப் பற்றி நமக்கு அதிகமாகத் தெரியும். எவ்வாறு அதைச் சமாளிப்பது என்பதும் தெரியும். வீரர்கள் பெரும்பாலும் இரு தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர், இதனால் பயோ-பாதுகாப்பு விரைவாக உருவாகிவிடும்.

இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட்டில் விளையாட இந்திய அணியில் 11 வீரர்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்ததால் ரத்து செய்யப்பட்டது என்பது நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது. கிரிக்கெட் போட்டிக்கு இந்த டெஸ்ட் போட்டி அவசியமானது. இந்த டெஸ்ட் தொடர் சுவாரஸ்யமாகச் சென்றது.

டாஸ் போடுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் திடீரென டெஸ்ட் போட்டியை ரத்து செய்தது அசவுகரியமானது. இந்தப் போட்டியைக் காண காத்திருந்த மக்களை அவமானப்படுத்துவதாக இந்த அறிவிப்பு இருந்தது.

பல மாதங்களாக மக்கள் திட்டமிட்டு, பணம் சேமித்த, பெருந்தொற்றுக் காலத்திற்கு இடையேயும் தங்களின் அன்புக்குரியவர்களுடன், குடும்பத்தாருடன் இணைந்து இந்த டெஸ்ட் போட்டியைக் காண ஆர்வமாக இருந்தார்கள் என்பது குறித்துப் பல கதைகள் கேட்டேன். டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது என்பதை எளிதாக எடுக்க முடியவில்லை. இந்தச் செய்தி வேதனைக்குரியதாகவும் இருந்தது''.

இவ்வாறு மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x