Last Updated : 07 Sep, 2021 08:53 AM

 

Published : 07 Sep 2021 08:53 AM
Last Updated : 07 Sep 2021 08:53 AM

'பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கியதும், என்னிடம் பந்தைக் கொடுங்கள் என பும்ரா கேட்டு வாங்கினார்': விராட் கோலி புகழாரம்


பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கியதும் என்னிடம் பந்தைக் கொடுங்கள் என பும்ரா என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டார் என்று பும்ராவின் பந்துவீச்சு குறித்து கேப்டன் கோலி பெருமையாக்க குறிப்பிட்டார்.

ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்குப்பின் ஓவல் மைதானத்தில் இந்திய அணி வென்று வரலாறு படைத்துள்ளது.

இதில் 100 ரன்கள் வரை விக்கெட்டுகளை இழக்காமல் வலுவான பாட்னர்ஷிப் அமைத்திருந்த இங்கிலாந்து அணி அடுத்த 47 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இங்கிலாந்து அணியின் சரிவுக்கு குறிப்பாக பும்ராவின் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சு முக்கியக் காரணமாகும். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியின் வெற்றிக்குப்பின் கேப்டன் விராட் கோலி ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாங்கள் வெற்றி பெற்ற இரு ஆட்டங்களிலும் எங்கள் வீரர்களின் போராடும் குணத்தை வெளிப்படுத்தியிருக்கிறோம். இந்தப் போட்டியை டிரா செய்ய நாங்கள் நினைக்கவில்லை, வெற்றி பெறவே விரும்பினோம். இந்திய அணியினர் தங்களின் போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது உண்மையாகவே பெருமையாக இருக்கிறது.

இந்த ஆடுகளம் தட்டையாக இருந்தது, கடும் வெயிலும் இருந்தது, இந்த சூழலில் ஜடேஜாவுக்கு பந்துவீச வாய்ப்பளித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்று அவருக்கு வாய்ப்பளித்தேன்.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் செய்தார்கள். எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என நம்பினோம், அதை எடுத்துவிட்டோம்.

பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கியதும், பும்ரா என்னிடம் வந்து பந்தை என்னிடம் கொடுங்கள் என கேட்டு வாங்கிக்கொண்டார். சிறப்பாகப் பந்துவீசி இரு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்துக்கு திருப்புமுனையாக அமைந்தார்.

ரோஹித் சர்மாவின் இன்னிங்ஸும் அற்புதமாக இருந்தது. இரு சதங்களை அடித்து தாக்கூர் அணிக்கு நல்ல ஸ்கோரை பெற்றுக்கொடுத்தார். ஷர்துலின் இரு அரைசதங்களுமே எதிரணிக்கு பெரும் இடையூறாக அமைந்தது. நாங்கள் ஒருபோதும் ஆய்வு, புள்ளிவிவரங்கள், ரன்கள் நோக்கி செல்லமாட்டோம்.

ஓவல் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காவிட்டாலும் பும்ரா, உமேஷ், தாக்கூர் மூவரும் சேர்ந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த 3 பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு சிறப்பானது.

எதில் எங்கள் கவனத்தைச் செலுத்துவது அவசியம் என எங்களுக்குத் தெரியும், குழுவாக நாங்கள் முடிவு எடுக்கிறோம். வெளியிலிருந்து எந்தவிதமான தேவையில்லாத குரல் வந்தாலும் அது எங்களைப் பாதிக்காது.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x