Last Updated : 05 Sep, 2021 08:52 AM

 

Published : 05 Sep 2021 08:52 AM
Last Updated : 05 Sep 2021 08:52 AM

பாராலிம்பிக்ஸ்: பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஐஏஎஸ் அதிகாரி சுஹாஸ்

பாட்மிண்டன் பிரிவில் வெள்ளி வென்ற இந்திய வீரர் சுஹாஸ் | படம் உதவி: ட்விட்டர்.

டோக்கியோ

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இந்திய அணி வீரர் சுஹாஸ் லாலினகேரே யாதிராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோவில் கடந்த மாதம் தொடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டி இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான இன்று ஆடவருக்கான எஸ்எல்-4 பிரிவில் பாட்மிண்டனுக்கான இறுதி ஆட்டம் நடந்தது.

இதில் இந்திய வீரர் சுஹாஸை எதிர்கொண்டார் பிரான்ஸ் வீரர் லூகாஸ் மசூர். உலகின் நம்பர் ஒன் வீரரான லூகாஸ் மசூருக்கு ஈடுகொடுத்து விளையாடிய சுஹாஸ் போராடித் தோல்வி அடைந்தார். 62 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சுஹாஸை 21-15, 17-21, 15-21 என்ற செட்களில் தோற்கடித்தார் லூகாஸ் மசூர்.

38 வயதான சுஹால் உத்தரப் பிரதேசம் கவுதம் புத்தநகர் மாவட் ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார். பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் ஐஏஎஸ் அதிகாரி சுஹாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

சாப்ஃட்வேர் இன்ஜினீயரான சுஹாஸ், குடிமைப் பணித் தேர்வு எழுதி ஐஏஎஸ் அதிகாரியாகி கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து நொய்டாவில் பணியாற்றி வருகிறார். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பல்வேறு நிவாரணப் பணிகளை முன்நின்று சுஹாஸ் மேற்கொண்டார்.

கடந்த 2017-ம் ஆண்டு துருக்கியில் நடந்த பாரா பாட்மிண்டன் போட்டியில் சுஹாஸ் தங்கம் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கமும், 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் வெண்கலமும் சுஹாஸ் வென்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து சுஹாஸ் கூறுகையில், “நான் விளையாடிய விதம் எனக்குத் திருப்தி அளிக்கிறது. ஆனால், 2-வது கேமை நான் முடித்திருக்க வேண்டும். அதில் தவறு செய்துவிட்டது சிறிது வருத்தமாக இருக்கிறது. சிறப்பாக ஆடிய லூகாஸுக்கு எனது வாழ்த்துகள். சிறப்பாக விளையாடுபவர்தான் வெற்றியாளராக மாற முடியும்” எனத் தெரிவித்தார்.

வெண்கலப் பதக்கத்துக்காக ஆடவர் பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்தோனேசிய வீரர் பிரெடி செதியாவனிடம் தோல்வி அடைந்தார் இந்திய வீரர் தருண் தில்லான். 32 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் பிரெடி செதியாவானிடம் 21-17, 21-11 என்ற செட்களில் தோல்வி அடைந்தார் தில்லான்.

இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x