Published : 03 Sep 2021 04:47 PM
Last Updated : 03 Sep 2021 04:47 PM

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக ரிஷப் பந்த் தொடர்வாரா? ஸ்ரேயாஸ் அய்யர் நிலை?

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்படுவாரா அல்லது ரிஷப் பந்த் கேப்டன் பதவியில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர், தோள்பட்டை காயம் காரணமாக இந்த சீசனின் முதல் பாதியில் தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து, ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ரிஷப் பந்த் தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 8 ஆட்டங்களில் 6 வெற்றிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில், காயத்திலிருந்து ஸ்ரேயாஸ் அய்யர் முழுமையாகத் தயாராகி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 2-வது சீசனில் டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் இடம் பெற்றால் கேப்டன் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகிகள் கிரண் குமார் கிராந்தி, பார்த் ஜின்டால் ஆகியோர் எடுத்த முடிவின்படி, இந்த சீசன் முழுவதும் அணிக்கு கேப்டனாக ரிஷப் பந்த் தொடரட்டும் என்று கூறியுள்ளதாக இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஸ்ரேயாஸ் அய்யர் எந்தவிதமான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை என்பதால், இந்த முறை சகவீரராகவே களமிறங்குவார் எனத் தெரிகிறது. இந்த சீசன் முழுமைக்கும் ரிஷப் பந்த் கேப்டனாகத் தொடர்வார் எனும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தோள்பட்டை காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஸ்ரேயாஸ் அய்யர், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயோ - பபுள் சூழலில் நேற்று இணைந்தார். ஐபிஎல் 2-வது சீசனில் ஸ்ரேயாஸ் அய்யர் டெல்லி அணியில் விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. பயிற்சியின்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக விளையாடி ஸ்ரேயாஸ் அய்யர் பயிற்சியும் எடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x