Published : 30 Aug 2021 06:13 PM
Last Updated : 30 Aug 2021 06:13 PM

இந்திய வட்டு எறிதல் வீரர் வினோத் குமாரிடமிருந்து வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது ஏன்?

பாராலிம்பிக்ஸில் பங்கேற்ற இந்திய வட்டு எறிதல் வீரர் வினோத் குமாரிடமிருந்து வெண்கலப் பதக்கம் திரும்பப்பெறப்பட்டுள்ளது. அது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இன்று காலை டோக்கியோ பாராலிம்பிக்ஸில் F52 பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் வினோத் குமார் பங்கேறார். அவர் 19.9 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்ததால் வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வெற்றிக்கு சக போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். F52 பிரிவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று முறையிட்டனர்.

இதனையடுத்து உடற் தகுதியை சோதனையிட்டு வகைப்படுத்தும் தொழில்நுட்பக் குழுவினர் வினோத் குமாரை மறுபடியும் பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் Classification not Completed (CNC), வகைப்படுத்துதல் முடிவு செய்யப்படவில்லை என்று கூறி அவரது பதக்கம் திருமபப்பெறப்பட்டது.

F52 வகைப்பாட்டில் ஒரு வீரரைப் பட்டியலிட அவருக்கு தசை சக்தியில் குறைபாடு, அங்கங்களில் குறைபாடு, கால் நீளத்தில் வித்தியாசம், முதுகு தண்டுவட காயம், செர்விக்கல் கார்ட் காயம் ஆகியனவற்றால் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது கால்களை இழந்தவராகவோ இருக்க வேண்டும்.
பாராலிம்பிக்ஸ் போட்டியில் வீரர்கள் அவர்களின் குறைபாடுகளுக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுகின்றனர்.

ஒரே அளவிலான குறைபாடு கொண்டவர்கள் தான் ஒரு பிரிவில் போட்டியிட முடியும். அதன் அடிப்படையில் தான் வினோத் குமாரின் வெண்கலப் பதக்கம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

வினோத் குமார் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x