Last Updated : 27 Aug, 2021 02:47 PM

 

Published : 27 Aug 2021 02:47 PM
Last Updated : 27 Aug 2021 02:47 PM

பக்கவாதத்தில் முடிந்த அறுவை சிகிச்சை: உயிருக்குப் போராடும் கிறிஸ் கெய்ன்ஸ்


நியூஸிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ் உயிரைக் காக்க ஆஸ்திேரலியாவில் நடத்தப்பட்ட அறுவைசிகிச்சை கடைசியில் அவரை பக்கவாதத்தில் கொண்டுபோய் சேர்த்துள்ளது.

51 வயதாகும் கிறிஸ் கெய்ன்ஸுக்கு உடல்நலக்குறைவால் ஏராளமான அறுவை சிகிச்சைகள் இதற்கு முன் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் கேன்பெரேரா நகரில் வசித்து வரும் கெய்ன்ஸுக்கு இம்மாதத் தொடக்கத்தில் இதயத்தில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கோளாறால் திடீரென மயங்கி விழுந்தார்.

கேன்பெரேரா நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கெய்ன்ஸுக்கு ஆக்சிஜன் உதவியோடு தீவிரமான சிகிச்சை தொடர்ந்து அளித்தும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, சிட்னியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கெய்ன்ஸுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை இதயத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை முடிந்தநிலையில் திடீரென கெய்னுக்கு ஸ்டோர் ஏற்பட்டு, அவரின் இடதுகால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு கெய்ன்ஸ் வழக்கறிஞர் ஆரோன் லாய்டு அளித்த பேட்டியில் “ கெய்ன்ஸுக்கு நடத்தப்பட்டஉயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சை சிட்னி வின்சென்ட் மருத்துவமனையில் நடந்தது.

ஆனால், அந்த அறுவை சிகிச்சை முடிந்தாலும், அவரின் முதுகுத் தண்டுவடத்தில் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, அவரின் கால்கள் பக்கவாதத்தால் செயலிழந்துவிட்டன. தற்போது ஆபத்தான நிலையைக் கடக்கவில்லை, ஆனால் கெய்ன்ஸ் நிலையாக இருக்கிறார். இதனால் முதுகு தண்டுவடத்துக்கு சிறப்பு சிகிச்சைஅளிக்கும் மருத்துவரை வரவழைத்துள்ளோம்.

இந்த கடினமான நேரத்தில் ஆஸ்திரேலிய மக்கள் கெய்ன்ஸ் உடல்நிலை தேற தேவையான உதவிகளை அளிப்பது அவரின் குடும்பத்துக்கு ஆறுதலாக இருக்கிறது. அதேநேரம் அவர்களின் தனிப்பட்ட அந்தரங்க உரிமையும் மதிப்பளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து அணியில் கடந்த 1989 முதல் 2006 வரை முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய கிறிஸ் கெய்ன்ஸ். 62 டெஸ்ட் போட்டிகள், 215 ஒருநாள் போட்டிகள், 2டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர் .

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின் லீக் போட்டிகளில் பங்கேற்ற கெய்ன்ஸுக்கு கிரிக்கெட் லீக் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையில் கடந்த 2008-ம் ஆண்டு கெய்ன்ஸ் சிக்கினார். அதன்பின் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஐபிஎல் நிறுவனர் லலித் மோடிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு அதில் வெற்றியும் பெற்றார்.

ஆனால், அதோடு கெய்ன்ஸுக்கு சோதனைக்காலம் முடியவில்லை. சகநாட்டு வீரர்கள் லூ வின்சென்ட், பிரன்டென் மெக்கலம் இருவரும் தங்களை மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட கெய்ன்ஸ் தூண்டினார் என்று புகார் எழுப்பினர். இந்த சர்ச்சையிலிருந்தும், வழக்கிலிருந்தும் விடுபடுவதற்கு கெய்ன்ஸ் நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி, ஏராளமான பணத்தை செலவிட்டார்.

ஒரு கட்டத்தில் வழக்கை நடத்துவதற்கும், குடும்பத்தை நடத்தவும் பணமில்லாமல் தவித்த கெய்ன்ஸ், ஆக்லாந்து லாரி ஓட்டுநர்கள் சங்கத்தில் லாரிகளையும், அதன் பணிமனைகளையும் சுத்தம் செய்யும் பணியில் கெய்ன்ஸ் ஈடுபட்டு ஊதியம் ஈட்டினார். ஒரு மணிநேரத்துக்கு 17 டாலர்கள் ஊதியத்தில் சேர்ந்து கெய்ஸ்ன் வேலை செய்தார். அதன்பின் சூதாட்ட சர்ச்சையிலிருந்து கெய்ன்ஸ் விடுபட்டார்.

கிறிஸ் கெய்ஸுக்கு மெலினியா என்ற மனைவியும் , இரு குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவின் கேன்பெரேரா நகரில் வசித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x