Last Updated : 26 Aug, 2021 08:33 AM

 

Published : 26 Aug 2021 08:33 AM
Last Updated : 26 Aug 2021 08:33 AM

34 ஆண்டுகளுக்குப்பின் மோசம்: கோலி படையை காலி செய்த 'ஆன்டர்ஸன் அன் கோ': வலுவான நிலையில் இங்கிலாந்து

இந்திய அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்த ஆன்டர்ஸன் | படம் உதவி ட்வி்ட்டர்

லீட்ஸ் 


ஜேம்ஸ்ன் ஆன்டர்ஸன், ஓவர்டன், ராபின்ஸன் ஆகியோரின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், லீட்ஸில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ரன்களில் சுருண்டது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் சேர்த்து 42 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஹசீப் ஹமீது 60 ரன்களுடனும், ரோரி பர்ன்ஸ் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸில் இப்படி மோசமான ஸ்கோரில் ஆட்டமிழந்தது கடந்த 34 ஆண்டுகளுக்குப்பின் இது முதல்முறையாகும்.

கடைசியாக கடந்த 1987-ம் ஆண்டு திலிப் வெங்சர்கர் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி டெல்லியில் நடந்த மே. இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்ரிக் பேட்டர்ஸன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 75 ரன்களில் முதல்நாளில் முதல் இன்னிங்ஸில் சுருண்டது.

அதன்பின் இந்திய அணி முதல்நாளில் முதல் இன்னிங்ஸில் இப்போதுதான் 78 ரன்களுக்கு சுருண்டது. ஒட்டுமொத்தமாக களத்தில் 40.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் 78ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியில் இரு ரஹானே(18), ரோஹித் சர்மா(19) இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். கேப்டன் கோலி(7), புஜாரா(1), ராகுல்(0) பந்த்(0),ஜடேஜா(4) என ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினார்.

இந்திய அணியின் ஸ்கோரில் 3-வது அதிகபட்சம் உதிரிகள் வாயிலாகக் கிடைத்த 16 ரன்களாகும். இந்த ரன்களும் கிடைக்காமல் இருந்திருந்தால் இந்திய அணியின் நிலை 62 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
லார்ட்ஸ் மைதானத்தில் 5-வது நாளின்போது இந்திய பந்துவீச்சாளர்கள் வெளிப்படுத்திய ஆட்டத்தை, இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் முதல் நாளிலேயேகாட்டிவிட்டனர்.

இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால், அதற்கு ஒட்டுமொத்த காரணத்தையும், பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் மீது சுமத்த முடியாது. இதற்கு முழு காரணம் கேப்டன் கோலி மட்டும்தான். டாஸில் அரிதாக வெல்லும் கோலி, அதிலும் முடிவை தவறாக எடுத்து அணியை தோல்வியின் படுகுழியில் தள்ளியிருக்கிறார்.

இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வந்தபோது புதிய பந்தை பும்ரா, ஷமி அல்லது சிராஜை பந்துவீச கோலி அழைக்காமல் இசாந்த் சர்மாவுக்கு வாய்ப்பளி்த்தது மிகப்பெரிய தவறாகும்.

லீட்ஸ் மைதானம் அடுத்த 4 நாட்களுமே ஆட்டத்தின் தொடக்கத்தில் முதல் 25 ஓவர்கள் வரைமட்டும்தான் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதிலும் 2-வது இன்னிங்ஸில் கடைசி நாளில் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி என கடந்த கால போட்டிகளின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இதுபோன்ற ஆடுகளத்தில் எந்த கேப்டனும் முதலில் பேட்டிங் செய்ய முன்வரமாட்டார்கள். லாட்ஸ் மைதானத்தை மனதில் வைத்து கோலி எடுத்த முடிவு அணி வீரர்களின் நம்பிக்கையை உடைக்கும் விதமாகவே இருக்கப் போகிறது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 350 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டாலே இந்திய அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியாக அமைந்துவிடும், இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டியதிருக்கும்.

முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணி 40 ஓவர்களில் ஆட்டமிழந்தபின், அடுத்தடுத்து ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறியது. இதனால்தான் 2-வது மற்றும் 3-வது செஷனில் கூட இந்திய பந்துவீச்சாளர்களால் வி்க்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

இன்றைய 2-வதுநாளில் தொடக்கத்திலேயே இந்திய பந்துவீச்சார்கள் விக்கெட்டை வீழ்த்த தவறிவிட்டால், மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி இங்கிலாந்து அணி செல்வது உறுதி.

பந்துவீச்சில் ஆன்டர்ஸன் மீண்டும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு படம் காட்டிவிட்டார். 8 ஓவர்கள் வீசிய ஆன்டர்ஸன் 6 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆன்டர்ஸனுக்கு துணையாகப் பந்துவீசிய ஓவர்டன் 3 விக்கெட், ராபின்ஸன், சாம் கரன் ஆகியோர் தலா 2 வி்க்கெட்டுகளை வீழ்த்தி சரிவுக்கு வித்திட்டனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை முதல் ஓவரில் ராகுலும்(0), 5-வது ஓவரில் புஜராவும்(1) ஆன்டர்ஸன் பந்துவீ்ச்சில் ஆட்டமிழந்தபோதே பேட்டிங் வரிசை ஆட்டம்காணத் தொடங்கியது.

பேட்டிங் ஃபார்மில் இல்லாத புஜாரவை ஏன் இன்னும் அணியில் கோலி வைத்திருக்கிறார் எனத் தெரியவில்லை. சூர்யகுமார், அகர்வால் பெஞ்சில் இருக்கும்போது அவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.
பாவம் கோலி என்ன செய்வார்.... ஸ்திரமான, துணிச்சலான முடிவு எடுக்க கேப்டன் முதலில் வலுவாக இருக்கவேண்டும். நல்ல ஸ்கோர் செய்திருக்க வேண்டும். கோலி அரைசதம் அடித்தே பல போட்டிகள் ஆகிறதே. புஜாரா மீது வீசப்படும் அம்பு, கோலி மீதும் திரும்புமே.....

சிறிது கூட இங்கிலாந்து வீரர்களுக்கு சிரமம் தராமல், ஆன்டர்ஸன் ஆஃப் ஸ்டெம்பி்ற்கு அருகே வீசிய பந்தை கட் செய்ய முயன்று பட்லரிடம் கேட்ச் கொடுத்து புஜாரா(1) வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் கோலி, மீண்டும் ஆன்டர்ஸன் விரித்த வலையில் சிக்கினார். காற்றில் வாப்லிங் ஸ்விங் பந்தை வீசிய ஆன்டர்ஸன் ஆப் ஸ்டெம்புக்கு வெளியே பிட்ச் செய்து உள்ளே எடுத்துவந்தார். பந்தை தவறாகக் கணித்த கோலி, பிரன்ட் ஃபுட் செய்து ஆட முயன்றபோது பட்லரிடம் கேட்ச் கொடுத்து 7 ரன்களில் வெளியேறினார். ஆன்டர்ஸன் பந்துவீச்சில் 7வது முறையாக கோலி ஆட்டமிழந்தார்.

அதன்பின் ரஹானே, ரோஹித் சர்மா கூட்டணி வி்க்கெட் சரிவைத் தடுத்து நிறுத்த முயன்றும் முடியவில்லை. ரஹானே 18 ரன்னில் ஆட்டமிழ்தார். ரிஷப் பந்த் 2 ரன்னிலும் வெளிேயறினர்.

109 பந்துகளைச் சந்தித்து களத்தில் இருந்த ரோஹித் சர்மா 19 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் இந்திய அணியின் சரிவு வேகமாக இருந்தது. 56 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி அடுத்த 22 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியின் டெயில் என்டர் பேட்ஸ்மேன்கள் இந்த முறை தங்களின் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தவி்ல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x