Published : 17 Feb 2016 09:25 AM
Last Updated : 17 Feb 2016 09:25 AM
குவாஹாட்டி மற்றும் ஷில்லாங்கில் நடைபெற்ற 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதில் இந்தியா 188 தங்கம் உட்பட 308 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
12வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கடந்த 5-ம் தேதி அஸாம் மாநிலம் குவாஹாட்டி மற்றும் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் கோலாகலமாக தொடங்கியது. ரூ.150 கோடி செலவில் நடத்தப்பட்ட இந்த போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதில் சார்க் அமைப்பில் உள்ள இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய 8 நாடுகளை சேர்ந்த 2,672 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து மட்டும் 276 வீரர்கள், 245 வீராங்கனைகள் என மொத்தம் 521 பேர் பங்கேற்றனர்.
12 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இதையொட்டி பிரம்மாண்டமான முறையில் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடை பெற்றது. நிறைவு விழாவில் கண்வர் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. விழாவில் அஸாம் முதல்வர் தருண் கோகாய், மத்திய அமைச்சர் சர்பானந்தா சோநோவால், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் ராமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முறை மொத்தம் 22 விளையாட்டுகளில் 226 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. சைக்கிளிங், ஹேண்ட்பால், கபடி, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஸ், நீச்சல், டென்னிஸ், டிரையத்லான், பேட்மிண்டன், டென்னிஸ், தடகளம், வில்வித்தை, குத்துச் சண்டை, டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், வூசு, ஜூடோ, மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா தங்க பதக்கங்களை அள்ளியது.
கடைசி நாளான நேற்று குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகளான மேரி கோம், சரிதா தேவி, பூஜா ராணி ஆகியோர் தங்கம் வென்றனர். மேரிகோம் 51 கிலோ எடை பிரிவில் இலங்கையின் அனுஷா தில்ருக்ஸியையும், 60 கிலோ எடை பிரிவில் சரிதா தேவி, இலங்கையின் விதுஸிகா பிரபாதியையும், 75 கிலோ எடை பிரிவில் பூஜா ராணி இலங்கையின் அந்தராவீர் நிலந்தியையும் வீழ்த்தினர்.
மேரிகோம், அனுஷாவை நாக் அவுட் செய்து வெற்றி பெற்றார். இந்தப் போட்டி 90 விநாடிகளே முடிவடைந்தது.
தொடக்கத்தில் இருந்தே மோரி கோமின் தாக்குதலால் நிலைகுலைந்த அனுஷாவுக்கு முதலில் வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு மருத்துவ உதவிகளைப் பெற்றார். பிறகு போட்டி தொடர்ந்தபோதும் மேரி கோம், தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடியதால் அனுஷா வளையத்தை விட்டு வெளியே விழுகிற நிலைமை உருவானது. அப்போது நடுவர் போட்டியை நிறுத்தி மேரி கோம் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
ஜூடோவில் கடைசி நாளான நேற்று இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி பதக்கம் கைப்பற்றியது. ஆடவருக் கான 90 கிலோ எடை பிரிவில் அவதார் சிங்கும், மகளிருக்கான 70 கிலோ எடை பிரிவில் பூஜாவும் தங்கம் வென்றனர்.
78 கிலோ எடை பிரிவில் அருணாவும், 100 கிலோ எடை பிரிவில் சுபம் குமாரும் வெள்ளி வென்றனர். ஜூடோவில் மொத்தம் 12 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா 9 தங்கம், 3 வெள்ளி பதக்கம் வென்று அசத்தியது.
12வது தெற்காசிய போட்டியில் இந்தியா 188 தங்கம், 90 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 308 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதன் மூலம் 8வது முறையாக இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியது. மேலும் இந்தியா கடந்த முறையை விட 133 பதக்கங்கள் கூடுதலாக பெற்றது. 2010ல் டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய போட்டியில் இந்தியா 90 தங்கம், 55 வெள்ளி, 30 வெண்கலம் என 175 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை இரண்டாவது இடத்தை இலங்கை பெற்றது. 25 தங்கம், 63 வெள்ளி, 98 வெண்கலத்துடன் இலங்கை 186 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. பாகிஸ்தான் 12 தங்கம், 37 வெள்ளி, 57 வெண்கலத்துடன் 106 பதக்கங்கள் பெற்று 3வது இடத்தை கைப்பற்றியது.
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் சொந்த மண்ணில் இந்தியா முதலிடத்தை கைப்பற் றுவது இது 3 வது முறை. இதற்கு முன்னர் 1987 ல் கொல் கத்தாவிலும், 1995 ல் சென்னை யிலும் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்றிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT