Last Updated : 16 Aug, 2021 08:06 AM

 

Published : 16 Aug 2021 08:06 AM
Last Updated : 16 Aug 2021 08:06 AM

இந்திய அணி 'கொலாப்ஸ்'; புஜாரைவைக் கலாய்த்த ரசிகர்கள்; வெற்றியை இழுக்கும் இங்கிலாந்து: இன்று கடைசிநாள் ஆட்டம்

இந்திய அணியைவிக்கெட் சரிவிலிருந்து மீட்ட ரஹானே, புஜாரா ஜோடி | படம் உதவி ட்விட்டர்

லண்டன்


லண்டனில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி2-வத இன்னிங்ஸில் ரன்கள் சேர்க்கப் போராடி வருவதோடு மட்டுமல்லாமல் தோல்வியைத் தவிர்க்கவும் கடுமையாக முயன்று வருகிறது

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற இருப்பதால், 200 முதல் 220 ரன்கள் சேர்த்தாலே இங்கிலாந்து அணியை சுருட்டிவிட முடியும். ஆனால் அந்த ரன்களை அடிப்பதற்குகூட இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதுதான் வேதனையானது. 2-வது இன்னிங்ஸில் இந்திய பேட்டிங் வரிசை கொலாப்ஸ் ஆனது.

கேப்டன் விராட் கோலியின் மோசமான பேட்டிங் இந்த இன்னிங்ஸிலும் தொடர்ந்து வருகிறது. மீண்டும் 2014ம் ஆண்டு தொடரைப் போன்ற அனுபவம் கோலிக்கு கிடைக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.

அஸ்வின் இல்லாத குறை

கடைசி நாள் ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறும், சுழற்பந்துவீச்சு எடுக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அஸ்வினை எடுக்காததன் விளைவை கோலி அனுப்பவிப்பார். இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்துவதில் அஸ்வின் கை தேர்ந்தவர். அவர் இல்லாத வெற்றிடம் இன்று தெரிந்துவிடும். ஒருவேளை இந்திய அணி தோற்றால், அஸ்வினை அணிக்கு சேர்காதது காரணம் என்ற அவப்பெயரை, பழியை கோலி ஏற்க வேண்டியதிருக்கும்.
மொயின் அலியின் ஆஃப்ஸிபின்னை அடிக்க முடியாத நிலைக்கு ஆடுகளம் மாறிவிட்டதால், நிச்சயம் அஸ்வின் இருந்திருந்தால், இந்திய அணிக்கு பெரிய பலமாக இருந்திருக்கும்.

இவ்வளவு மெதுவாக பேட் செய்வது!

புஜாரா முதல் டெஸ்டில் சொதப்பிய நிலையி்ல் 2வது இன்னிங்ஸில் முதல் ரன்னை எடுக்க 35 பந்துகளை எடுத்துக்கொண்டார். புஜாரா முதல் ரன்னை எடுத்ததும் ரசிகர்கள் கைதட்டி புஜாராவைக் கலாய்த்தனர். 100பந்துளைச் சந்தித்த புஜாரா 12 ரன்கள் மட்டுேம சேர்த்து டெஸ்ட் பேட்டிங்கின் சாராம்ஸத்தையே மறக்கடிக்கும் வகையில் பேட்டிங் செய்தார். மோசமான பந்துகளைக் கூட பவுண்டரி அடிக்கவும், புஜாரா திணறியதோடு மட்டுமல்லாமல் மார்ட் உட் வீசிய பல பவுன்ஸர்களை உடலில் தாங்கி அடிவாங்கினார்.

இந்திய அணி 55 ரன்களுக்கு 3 விக்கெட் என்று கொலாப்ஸான நிலையில் ரஹானே, புஜாரா இருவரும் ஏறக்குறைய 50 ஓவர்கள் பேட்டிங் செய்து 100 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் வேகம் ரஹானேவிடம் இருந்த ரன் சேர்க்கும் வேகம் புஜாராவிடம் காணப்படவில்லை. ரஹானேவுக்கு ஈடாக புஜாராவும் ரன்களைச் சேர்த்திருந்தால், இந்திய அணி கூடுதலாக 30 ரன்களை பெற்றிருக்கும். மோசமான பந்துகளைக் கூட பவுண்டரி அடிக்கவும், ரன் எடுக்கவும் மறுத்து பேட் செய்யும் புஜாராவின் ஆட்டம் பார்ப்பவர்களை வெறுப்பின் உச்சத்துக்கு தள்ளியது.

ரஹானே நீண்ட காலத்துக்குப்பின் அரைசதம் அடித்து 61 ரன்னில் ஆட்டமிழந்தார், புஜாரா 206 பந்துகளைச் சந்தித்து 45 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

பந்த்திடம் பெரிய இன்னிங்ஸ் தேவை

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்துள்ளது. வெளிச்சம் குறைவாக இருந்ததால், ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. ரிஷப் பந்த் 14 ரன்னிலும், இசாந்த் சர்மா 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

இன்னும் இந்தியாவின் கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தாலும், அந்த 3 பேருமே பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதால், ஸ்கோர் செய்ய வேண்டிய அழுத்தம், நெருக்கடி அனைத்தும் ரிஷப் பந்த் தலையில் விழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுடன் இதேபோன்ற நெருக்கடியான நேரத்தில் ரிஷப்பந்த் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அதேபோன்ற ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தி இன்னும் 50 ரன்கள் சேர்த்தாலே போதுமானது. இங்கிலாந்துக்கு அணிக்கு வலுவான இலக்காக மாறிவிடும்.

நெருக்கடி கொடுக்கலாம்

கடைசி நாளில் இந்த ஆடுகளத்தில் 200 முதல் 220 ரன்களை சேஸிங் செய்வது கடினம் எனக் கூறப்படுகிறது. ஆதலால், இந்திய அணி இன்னும் 50 ரன்கள் கூடுதலாகச் சேர்த்தாலே ஓரளவுக்கு தோல்வியிலிருந்து தப்பிவிடலாம்.

இன்றைய கடைசி நாள் ஆட்டம்தான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும், தொடரை யார் முன்னிலையுடன் நடத்தப்போகிறார்கள் எனத் தெரிந்துவிடும். முடிந்தவரை இந்திய அணி220 ரன்கள் வரை அடித்து ஆட்டமிழந்துவிட்டாலே அது இங்கிலாந்து அணிக்கு பெரிய இலக்காகவிடும்.

கடைசிநாளில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாகிவிட்டதால், இந்தியாவில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடும் வகையில் இங்கிலாந்து அணியில் ரூட்டைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்களிடம் நிலைத்தன்மை இல்லை. ஆதலால், தோல்வியை நோக்கி இங்கிலாந்து சென்றாலே ஆட்டத்தை டிரா செய்ய முயற்சிப்பார்கள். ஆதலால், இந்திய அணி இன்னும் கூடுதலாக 50 ரன்கள் சேர்ப்பதில்தான் ஆட்டத்தின் போக்கை முடிவு செய்ய முடியும்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களும், இங்கிலாந்து அணி 391 ரன்ளும் சேர்த்து ஆட்டமிழந்தன. இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

பந்துவீச்சுக்கு சாதகம்

இந்திய அணி நேற்றைய 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. 4-வது ஆட்டத்தில் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறிவிட்டது என்பதை இந்திய தொடக்க வரிசை ராகுல், ரோஹித் சர்மா நினைக்கவி்ல்லை.

150கி.மீ வேகத்தில் மார்க் உட் வீசிய பந்தில் ராகுல் 5 ரன்னில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களமிறங்கி, ரோஹித்துடன் சேர்ந்தார். ரோஹித் சர்மாவுக்கு பல பவுன்ஸர்களை போட்டு மார்க் உட் வெறுப்பேற்றி வந்தார், அதில் சில பவுண்டரிகளையும் ஸ்குயர் லெக் திசையில் அடித்தார். ஆனால், ஸ்குயர் லெக் திசையில் மொயின் அலியை நிறுத்தி பவுன்ஸர்களைப் போட்டு ரோஹித் சர்மா வி்க்கெட்டை சொல்லிவைத்தார்போல் தூக்கினார்கள். ரோஹித் சர்மா 27ரன்னில் வெளியேறினார்.

வீண் ஜம்பம்

அடுத்து வந்த கேப்டன் கோலி, புஜாராவுடன் சேர்ந்தார். வந்தவேகத்தில் கவர் திசையில் இரு பவுண்டரிகளை அடித்து ஃபார்மில் இருப்பது போல் கோலி காட்டிக்கொண்டார். ஆனால், கோலியின் ஜம்பம் நீண்டநேரம் நிலைக்கவில்லை, சாம் கரன் பந்துவீச்சில் அவுட் ஸ்விங்கில் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு பட்லரிடம் கேட்ச் கொடுத்து கோலி20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

முதல் ரன், முதல் பவுண்டரி

55 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி இருந்தது, ஆட்டத்தை இங்கிலாந்து அணி கையில்எடுத்தது. 4-வது விக்கெட்டுக்கு புஜாரா, ரஹானே இருவரும் சேர்ந்தனர். ரன்அடிக்க மாட்டேன் என்ற பிடிவாதத்துடனே புஜாரா பேட் செய்தது போன்று இருந்தது. 35 பந்துகளைச் சந்தித்து முதல் ரன்னை புஜாரா எடுத்தவுடன் ரசிகர்கள் கைதட்டி கலாய்த்தனர்.

118 வது பந்தைச் சந்தித்த புஜாரா, தனது முதல் பவுண்டரியை மாரக் உட் பந்துவீச்சில் ப்ளிக் ஷாட்டில் அடித்தவுடன் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டியது கலாய்ப்பின் உச்சமாக இருந்தது.

ரஹானே , புஜாரா இருவரும் விக்கெட்டைச் சரிவையும் தடுத்து ரன்களைச் சேர்த்தனர். இருவரையும் பிரி்க்க பலபந்துவீச்சாளர்களை ரூட் மாற்றியும் பலனில்லை, ஏறக்குறைய 50 ஓவர்கள் வரை இருவரும் களத்தில் நின்றனர். ரஹானே அரைசதம் அடித்தார். 28 ஓவர்களைச் சந்தித்த இருவரும் 48 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தனர்.

புஜாரா 45 ரன்னில் மார்க் உட் பந்துவீச்சில் 2-வது ஸ்லிப்பில் இருந்த ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மொயின் அலி

மொயின் அலியின் ஆஃப் ஸ்பின்னுக்கு திணறிய ரஹானே 61 ரன்கள் சேர்த்தநிலையில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆல்ரவுண்டர் ஜடேஜா வந்த வேகத்தில் 3 ரன்னில் மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.ரிஷப் பந்த்14ரன்னிலும் இசாந்த் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர் மார்க் உட் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சும் பெரிதாக இல்லை, ரன்களும்வாரிக் கொடுத்தார். ஆனால், 2-வது இன்னிங்ஸில் ஆடுகளம் சாதகமானதும், தனது 150கி.மீ வேகத்தில் இ்ந்திய பேட்டிங் வரிசையை குலைத்துவிட்டார். பீல்டிங் செய்தபோது, காயம் ஏற்பட்டு வெளியேறிய மார்க் உட் நீண்ட நேரத்துக்குப்பின், புதிய பந்து எடுக்கப்பட்டபின்புதான் களத்துக்குள் வந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x