Last Updated : 14 Aug, 2021 08:27 AM

 

Published : 14 Aug 2021 08:27 AM
Last Updated : 14 Aug 2021 08:27 AM

இங்கிலாந்துக்கு 'ரூட்' டாக நிற்கும் கேப்டன் ரூட்: சிராஜ் வேகத்தில் சரிந்த பேட்டிங் வரிசை: ஆட்டம் எதைநோக்கித் திரும்பும்?

முகமது சிராஜ் பந்துவீ்ச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹசீப் ஹமீது போல்டாகிய காட்சி | படம் உதவி ட்விட்டர்

லண்டன்


கேப்டன் ரூட்டின் நிதானமான ஆட்டத்தால் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 2-வதுநாள் ஆட்டத்தை நிதானமாகத் தொடங்கியுள்ளது.

2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 45 ஓவர்களில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் சேர்த்துள்ளது. ரூட் 48 ரன்களுடனும், பேர்ஸ்டோ 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக இந்தியஅணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் ஸ்கோரைவிட இங்கிலாந்து அணி 245 ரன்கள் பின்தங்கியுள்ளனர்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், 15-வது ஓவரில் அடுத்தடுத்து, சிப்ளி(11), ஹசீப் அகமது(0) இருவரையும் வெளியேற்றி இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தார். ரூட், பர்ன்ஸ் நிதானம் காட்டி பொறுமையாக பேட் செய்தனர். இருவரும் சேர்ந்து 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். பர்ன்ஸ் 49 ரன்கள் சேர்த்திருந்தபோது ஷமி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அரைசதத்தை நோக்கி நகர்ந்த ரூட் 48 ரன்களுடனும், பேர்ஸ்டோ 6 ரன்களுடனும் உள்ளனர்.

இங்கிலாந்து அணியின் கைவசம், பட்லர், சாம் கரன், ராபின்ஸன், மொயின் அலி என 4 வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் கேப்டன் ரூட் 2-வது டெஸ்ட் போட்டியிலும் நங்கூரம் பாய்ச்சி வருகிறார். லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி எடுத்த ஸ்கோருக்கு தகுந்த பதிலடி கொடுக்கவே கேப்டன் ரூட் நிதானமாக ஆடிய வருகிறார். இங்கிலாந்து அணி விக்ெகட்டுகளை மளமளவென இழக்காமல் இன்று முழுவதும் பேட்டிங் செய்தாலே இந்திய அணிக்கு தகுந்த பதிலடி கொடுத்து, முதன் இன்னிங்ஸ் ஸ்கோரைக் கடக்க முடியும்.

ஒருவேளை இன்று மாலைக்குள், இங்கிலாந்து அணி, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைக் கடந்தோ அல்லது நெருக்கமாக வந்து ஆட்டமிழந்துவிட்டால், அடுத்த இரு நாட்களும் ஆட்டம் பரபரப்பாக அமைந்துவிடும். இரு அணிகளும் ஆட்டத்தை முடிக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பந்துவீசத் தொடங்கும்போது ஆட்டம் ஸ்வாரஸ்மாக இருக்கும்.

லார்ட்ஸ் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் சாதகமில்லாமல் இருந்து வருகிறது. ஆட்டம் தொடங்கிய முதல் 2 மணிநேரத்துக்குள் இங்கிலாந்து அணியில் சில விக்கெட்டுகளை இந்தியப் பந்துவீச்சாளர்கள் வீழ்த்திவிட்டால் நெருக்கடி கொடுக்கலாம். அதன்பின் வெயில் அதிகரி்க்கும்போது ஆடுகளம் பேட்ஸ்மேன்கள் பக்கம் திரும்புகிறது. ஆதலால், முதல் 2 மணிநேரத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்பாடு கவனிக்கப்படும்.

இங்கிலாந்து அணியி்ல் அடுத்து களமிறங்கும் 4 பேட்ஸ்மேன்களுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடக்கூடியவர்கள். அதிலும் குறிப்பாக பட்லர், மொயின் அலி இருவருமே நிலைத்துவிட்டால் இந்திய அணிக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்பதால் இருவர் விக்கெட்டுகளையும்விரைவாக வீழ்த்த இந்தியப் பந்துவீச்சாளர்கள் முயல வேண்டும்

முன்னதாக முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் சேர்த்திருந்தது. கே.எல்.ராகுல் 127 ரன்களுடனும், ரஹானே ஒரு ரன்னுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2-ம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியபின், சிறிது நேரத்திலேயே ராபின்ஸன் பந்துவீச்சில் ராகுல் 129 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆன்டர்ஸன் வீசிய அடுத்த ஓவரில் ரஹானே ஒரு ரன்னில் வெளியேறினார்.

மூத்த வீரர்கள் என்ற அடையாளத்தோடு புஜாரா, ரஹானே, விராட் கோலி எதற்காக அணியில் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. புஜாரா, ரஹானேவுக்குப் பதிலாக ஹனுமா விஹாரி, மயங்க் அக்ரவால் இருவரையும் அடுத்த டெஸ்ட்போட்டிக்கு தேர்வு செய்யலாம். அதிலும் புஜாரா ஆஸ்திரேலியத் தொடரோடு சரி அதன்பின் எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை.

அடுத்துவந்த ரிஷப்பந்த், ஜடேஜா ஜோடி ஓரளவுக்கு நிலைத்தனர். அதிரடியாக பவுண்டரிகள் அடித்த ரிஷப்பந்த் 37 ரன்களில் மார்க் உட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் முகமதுஷமி(0) மொயின் அலி பந்துவீச்சிலும், இசாந்த் சர்மா(8), பும்ரா(0) ஆன்டர்ஸன் வேகத்திலும் ஆட்டமிழந்தனர். ஜடேஜா 40 ரன்னல் உட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

126.1 ஓவர்களில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இ்ங்கிலாந்து தரப்பில் ஆன்டர்ஸன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மார்க்உட், ராபின்ஸன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x