Last Updated : 11 Aug, 2021 08:17 AM

 

Published : 11 Aug 2021 08:17 AM
Last Updated : 11 Aug 2021 08:17 AM

ஆப்கானிஸ்தான் மக்களை கைவிட்டுவிடாதீர்கள்: உலகத் தலைவர்களுக்கு ரஷித் கான் உருக்கமான வேண்டுகோள்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் | கோப்புப்படம்

காபூல்


ஆப்கானிஸ்தான் மக்களை குழப்பத்தில் விட்டுவிடாதீர்கள், ஆப்கானையும், மக்களையும் அழிப்பதை நிறுத்தங்கள், எங்களை கைவிட்டுவிடாதீர்கள் என்று உலகத் தலைவர்களிடம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது.

தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் அதன்பின் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட்டு ஹமீது கர்சாய் அதிபரானார். அமெரிக்கப் படைகள், நேட்டோ படைகள் இருந்ததால், தலிபான் தீவிரவாதிகள் ஒடுங்கி, அடங்கி இருந்தனர்.

அமெரி்க்க அதிபராக இருந்த ட்ரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலகக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்பின், புதிய அதிபராக வந்த ஜோ பைடன் இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்தார். இதன்படி, அமெரிக்கப் படைகளும், நேட்டோ படைகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து பெரும்பகுதி வெளிேயறிவிட்டனர்.

இதனால் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள். இரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியையும் கைப்பற்றி, சுங்கவரி வசூலித்து அதன்மூலம் பணம் ஈட்டவும் தலிபான்கள் தி்ட்டமிட்டுள்ளனர்.

கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 7 மாகாணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பூமியில் மிகவும் ஆபத்தான, மோசமான இடமாக ஆப்கானிஸ்தான் மாறிவருவதை நினைத்து அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனையுடன் உலகத் தலைவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஷித் கான் ட்விட்டரில் விடுத்து வேண்டுகோளில் கூறுகையில் “ அன்பார்ந்த உலகத் தலைவர்களே! என்னுடை தேசம் முழுமையான நிர்வாக சீர்கேட்டில், குழப்பத்தில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் நாள்தோறும் துப்பாக்கி குண்டுகளுக்கும், குண்டுகளுக்கும் வீரமரணம் அடைகிறார்கள்.

எங்கள் மக்களின் வீடுகள், சொத்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் புலம்பெயர்ந்துள்ளார்கள். எங்களை பெரும் குழப்பத்திலும், முழுமையான சீர்கேட்டிலும் கைவிட்டுவிடாதீர்கள்.

ஆப்கானிஸ்தான் மக்களைக் கொல்வதை நிறுத்துங்கள், ஆப்கானிஸ்தானை அழிப்பதை நிறுத்துங்கள். எங்களுக்கு அமைதி தேவை” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x