Published : 09 Aug 2021 05:25 PM
Last Updated : 09 Aug 2021 05:25 PM

இந்திய வீரர்களின் மனநிலை அந்தத் தொடரிலிருந்து மாறிவிட்டது: இன்சமாம் உல் ஹக் கணிப்பு

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் | கோப்புப் படம்.

இஸ்லாமாபாத்

இந்திய அணி வீரர்களின் மனநிலை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பின் மாறிவிட்டது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரண்ட் பிரிட்ஜில் நடந்தது. கடைசி நாளில் இந்திய அணி வெற்றிக்கு 157 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் மழையால் ஆட்டம் ரத்தானது. இதனால் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்தியாவிடம் கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தபோதிலும் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டதால், வெற்றி கைநழுவிப் போனது.

பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் இங்கிலாந்து அணியை விடச் சிறப்பான நிலையில் இந்திய அணியினர் இருந்ததால், முதல் டெஸ்ட்டில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக வந்த மழையால் அனைத்தும் மாறியது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் யூடியூப்பில் இந்திய அணியின் செயல்பாடு குறித்துப் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

''ஆஸ்திரேலியாவுக்குக் கடந்த ஆண்டு சென்று வெற்றி பெற்று திரும்பியபின் இந்திய அணி வீரர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அணியில் உள்ள முக்கிய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்காவிட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. பெரிய தாக்கமும் அணிக்கு ஏற்படுவதில்லை. அணியில் உள்ள இளம் வீரர்கள் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டு விடுகின்றனர்.

நான் தனிப்பட்ட முறையில் ரிஷப் பந்த்தின் பேட்டிங்கைப் பார்க்க ஆசைப்படுகிறேன். ரிஷப் பந்த் விளையாடும் விதம் அருமையாக இருக்கிறது. முதல் டெஸ்ட்டில் துரதிர்ஷ்டவசமாக விரைவாக ஆட்டமிழந்துவிட்டார். ஆனால் கடினமான சூழலிலும் ரிஷப் பந்த் அவரின் இயல்பான ஆட்டத்தைதான் ஆட வேண்டும்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் கடுமையான போட்டி அளித்து சவாலாக இருப்பார்கள். மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்களுக்குத் தரமான கிரிக்கெட் விருந்தாக அமையும். அருமையான தொடராகவும் அமையும்.

இங்கிலாந்து மண்ணில் இளம் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவதைக் காண முடியும். முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெல்வதற்குத் தங்கமான வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் பரவாயில்லை, அடுத்துவரும் தொடர்களில் முதல் டெஸ்ட் போட்டி போன்று உற்சாகமான கிரிக்கெட்டை இந்திய அணி விளையாடும் என நம்புகிறேன்''.

இவ்வாறு இன்சமாம் உல் ஹக் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x