Last Updated : 09 Aug, 2021 04:47 PM

 

Published : 09 Aug 2021 04:47 PM
Last Updated : 09 Aug 2021 04:47 PM

பும்ரா ஃபார்முக்குத் திரும்பிவிட்டார் என எதற்காகச் சொல்கிறீர்கள்?- புதிர் போடும் கே.எல்.ராகுல்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா | கோப்புப் படம்.

நாட்டிங்ஹாம்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் ஃபார்முக்குத் திரும்பிவிட்டார் என்று எதற்காகக் கூறுகிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை என்று இந்திய வீரர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

நாட்டிங்ஹாமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள், 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் என 9 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தியுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலின்போது பந்துவீச்சில் பும்ரா சிறப்பாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது ஒரே டெஸ்ட்டில் பும்ரா 9 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டதால் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று ஊடகங்கள் பேசத் தொடங்கியுள்ளன.

பும்ராவின் பந்துவீச்சு குறித்து சக வீரர் கே.எல்.ராகுலிடம் நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு ராகுல் கூறியதாவது:

''பும்ரா மீண்டும் ஃபார்முக்குத் திரும்பிவிட்டார் என்று ஏன் கேட்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. இந்தக் கேள்வி எனக்கு வியப்பாக இருக்கிறது. ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு காலநிலையிலும் பும்ரா தனது பந்துவீச்சை நிரூபித்து, நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என மெய்ப்பித்து வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதிலிருந்து பும்ரா பந்துவீசும் முறை எங்களுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

பும்ரா எங்கு விளையாடினாலும் எங்களுக்கு அவர் மேட்ச் வின்னர்தான். சிறப்பான பந்துவீச்சை மீண்டும் வெளிப்படுத்தியது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டாஸில் தோற்றபின், முதல் இன்னிங்ஸில் நாங்கள் பந்துவீசியது, கட்டுக்கோப்பான பந்துவீச்சால் ஒழுக்கம் காட்டியது போன்றவை சிறப்பானவை. டாஸில் தோற்றாலும் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்படமுடியும் என்பதை வெளிப்படுத்த எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு.

முகமது ஷமி, பும்ரா சிறப்பாகத் தொடங்கினர். ஷர்துல், சிராஜ் அதைப் பின்பற்றினார்கள். அனைவரும் சேர்ந்து உழைத்து சரியான திசையில் அணியைக் கொண்டு சென்றனர். பல வாய்ப்புகளை இழந்தாலும், எங்களின் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம். அதற்கான பலனும் கிடைத்தது. அனுபவமான பந்துவீச்சு, கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்விக்குப் பின் நாங்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காகத் தயாராகிவிட்டோம். பந்துவீச்சு, பேட்டிங்கிலும் சிறந்த பயிற்சிகளைக் கடந்த ஒன்றரை மாதங்களாக எடுத்துள்ளோம். ஆதலால், சிறப்பான முடிவுகளைப் பெறுவோம் என நம்புகிறேன்.

கடந்த 3 சீரிஸ்களாக நான் பிளேயிங் லெவனில் விளையாட முடியவில்லை. ஆனால், 2 ஆண்டுகளுக்குப் பின் இந்த டெஸ்ட்டில் களமிறங்கியது மகிழ்ச்சியளிக்கிறது''.

இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x