Last Updated : 08 Aug, 2021 10:07 AM

 

Published : 08 Aug 2021 10:07 AM
Last Updated : 08 Aug 2021 10:07 AM

அள்ளிக் கொடுத்தது சிஎஸ்கே: நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு, சிறப்பு ஜெர்ஸி

ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை தேசமே கொண்டாடி வரும் நிலையில், அந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசும், ஸ்பெஷல் ஜெர்ஸியும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அதன்பின் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று 2-வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.

நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 87 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி முனையைச் செலுத்தினார். 2-வது முயற்சியில் அதைவிடக் கூடுதலாக 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை சோப்ரா எறிந்தார். இதையடுத்து, அதிகமான தொலைவு எறிந்த நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை வென்றார்.

நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்த நினைவாக சிஎஸ்கே அணி 8758 என்ற எண் பொறிக்கப்பட்ட சிறப்பு ஜெர்ஸியையும் அவருக்கு வழங்க உள்ளது.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட அறிவிப்பில், “இந்தச் சிறப்பான வரலாற்றுச் சாதனையை நினைவுகூரும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சார்பிலும், நாட்டின் பெருமளவு மக்களால் விரும்பப்படும் அணி சார்பிலும், லெப்டினன்ட் கர்னல் எம்.எஸ்.தோனி தன்னுடைய வாழ்த்துகளை நீரஜ் சோப்ராவுக்குத் தெரிவித்துள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையை கவுரவிக்கும் வகையில் சிஎஸ்கே அணி நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கி கவுரவிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

சிஎஸ்கே அணியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் சாதனையால் இந்தியர்களாகிய நாம் பெருமைப்படுகிறோம். சோப்ராவின் சாதனை, லட்சக்கணக்கான இளைஞர்களை விளையாட்டுக்கு வரவழைத்து, பங்குபெற வைக்கும், எந்த விளையாட்டிலும் உச்சத்துக்குச் செல்ல உந்துதலாக இருக்கும்.

ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தொலைவு எறிந்து தங்கம் வென்ற சோப்ராவின் முயற்சி ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக 8758 என்ற எண் அச்சிடப்பட்ட சிறப்பு ஜெர்ஸியையும் சிஎஸ்கே நிர்வாகம் சோப்ராவுக்கு வழங்க உள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்திய அளவில் ஒலிம்பிக்கில் பஜ்ரங் பூனியா (வெண்கலம்), மிராபாய் சானு (வெள்ளி), பி.வி.சிந்து (வெண்கலம்), லவ்லினா போரோஹெயின் (வெண்கலம்), ஆடவர் ஹாக்கி (வெண்கலம்), ரவிகுமார் தாஹியா (வெள்ளி) ஆகியோர் பதக்கங்கள் வென்று தாயகம் திரும்புகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x