Published : 07 Aug 2021 12:31 PM
Last Updated : 07 Aug 2021 12:31 PM

டோக்கியோ ஒலிம்பிக்; 200-வது இடத்திலிருந்து 4-வது இடம்: அதிதி அசோக் சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ஃப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் வெண்கலப் பதக்கத்தை குறுகிய புள்ளிகளில் தவறவிட்டார்.

ஒலிம்பிக் கோல்ஃப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார் இந்தியாவின் இளம் வீராங்கனை அதிதி அசோக். எனினும் அதிதியால் நான்காம் இடமே பிடிக்க முடிந்தது. வெண்கலப் பதக்கத்துக்கான வாய்ப்பை குறுகிய புள்ளிகளில் அதிதி தவறவிட்டார்.

இப்போட்டியில் அமெரிக்காவின் கெல்லி கோர்டா தங்கப் பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கத்தை ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனையும், வெண்கலப் பதக்கத்தை நியூசிலாந்து வீராங்கனையும் வென்றனர்.

மகளிர் கோல்ஃப் தரவரிசைப் பட்டியலில் 200ஆம் இடத்திலுள்ள அதிதி, ஒலிம்பிக் கோல்ஃப் இறுதிப் போட்டியில் நான்காம் இடம் பிடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அதிதிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் நான்காம் இடம் பிடித்ததன் மூலம் இந்திய அளவில் கோல்ஃப் விளையாட்டின் தனிப்பட்ட நபர்கள் பிரிவில் அதிதி சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் அதிதிக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “டோக்கியோ ஒலிம்பிக்கில் உங்களது அற்புதமான திறனை வெளிப்படுத்தியுள்ளீர்கள். பதக்கம் குறுகிய புள்ளிகளில் பறிபோனது. உங்களது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x