Last Updated : 05 Aug, 2021 05:27 PM

 

Published : 05 Aug 2021 05:27 PM
Last Updated : 05 Aug 2021 05:27 PM

ஹாக்கியில் தோற்றதற்கு சாதியைச் சொல்லி அவதூறு: இந்திய வீராங்கனையைத் திட்டியவர் கைது

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெருமையை வீரர்களும், வீராங்கனைகளும் உலக அளவில் பரப்பிவரும் நிலையில், இந்திய ஹாக்கி அணி வீராங்கனை வந்தனா கட்டாரியாவை சாதி பெயரைக் கூறி திட்டிய சம்பவம் நடந்துள்ளது.

வந்தனா கட்டாரியாவின் வீட்டின் முன் நின்று சாதி பெயரைக் கூறியும், அவதூறாகவும் பேசியவரை தேடிப் பிடித்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் வந்தனா கட்டாரியா. ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்தவர் வந்தனா கட்டாரியா. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனைகளில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த முதல் பெண் வந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.


அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியிடம் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியுடன் இந்திய மகளிர் அணி மோதவுள்ளது.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள ரோஷனாபாத் நகரில் வந்தனா கட்டாரியா வசித்து வருகிறார். அர்ஜென்டினா அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்த செய்தி கேட்டதும், இரு நபர்கள் ரோஷனாபாத்தில் உள்ள வந்தனாவின் வீட்டின் முன்பு வந்து நின்று நடனமாடி, கிண்டல் செய்து, பட்டாசுகளை வெடித்துள்ளனர்.

இந்தச் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த வந்தனாவின் குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, அவர்களின் சாதிப் பெயரைக் கூறி அவதூறு செய்துள்ளனர். இந்திய அணி தோற்றதற்கு அதிகமான தலித் பிரிவினரைச் சேர்த்ததுதான் காரணம் எனக் கூறி அவதூறு சொற்களைக் கூறி திட்டிச் சென்றனர். அப்போது வந்தனாவின் குடும்பத்தாருக்கும், அந்த இரு நபர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒருகட்டத்தில் அந்த இரு நபர்களும் அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து வந்தனா கட்டாரியாவின் சகோதரர் போலீஸாரிடம் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்துஅந்த நபர்களைத் தேடி வந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் ஒருவர் அடையாளம் கண்டறியப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் விஜய் பால் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மற்றொருவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவர்கள் இருவர் மீதும் ஐசிபி 504, எஸ்சி,எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x