Last Updated : 05 Aug, 2021 12:59 PM

 

Published : 05 Aug 2021 12:59 PM
Last Updated : 05 Aug 2021 12:59 PM

இந்தியாவில் ஹாக்கி மறுபிறவி எடுத்துள்ளது: கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் உற்சாகம்

இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு 41 ஆண்டுகளுக்குப் பின் மறுபடியும் பிறந்துள்ளது. இளம் வீரர்கள் அதிகமானோர் இந்த விளையாட்டை நோக்கி இனிமேல் வருவார்கள் என்று இந்திய ஹாக்கி அணியின் சுவர் என வர்ணிக்கப்படும் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் உற்சாகமாகத் தெரிவித்தார்.

டோக்கியோவில் இன்று நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

கடைசியாக 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது. அதன்பின் 41 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுவரும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியால் ஒரு பதக்கத்தைக் கூட வெல்ல முடியவில்லை. ஆனால், தற்போது 41 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக வெண்கலத்தை இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

வெண்கலம் வென்றபின் இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் ஆனந்தக் கண்ணீர் விட்டு ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் மட்டும் கோல் போஸ்ட்டின் உச்சியில் ஏறி அமர்ந்து தனது ஆட்சியை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 21 ஆண்டுகளாக ஹாக்கி விளையாடி வரும் ஸ்ரீஜேஷ் கேப்டனாகவும் அணிக்குத் தலைமை வகித்துள்ளார்.

கேரள மாநிலம் பள்ளிக்கரா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜேஷ் கடைசி வினாடிகளில் ஜெர்மனியின் கோலைத் தடுத்த காட்சியைப் பார்த்த அவரின் குடும்பத்தினர் கொண்டாடியதும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஸ்ரீஜேஷ் குடும்பத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி இந்த நாளைக் கொண்டாடினர்.

இந்த வெற்றி குறித்து கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''41 ஆண்டுகளுக்குப் பின் பதக்கக் கனவு நனவாகியுள்ளது. கடைசியாக 1980-ம் ஆண்டில் பதக்கம் வென்று இப்போதுதான் மீண்டும் பதக்கம் வெல்கிறோம். இந்த வெற்றி வருங்காலத் தலைமுறையினருக்கும், இளைஞர்களுக்கும் உற்சாகத்தை அளித்து ஹாக்கி விளையாட்டை நோக்கி வரத் தூண்டும், இந்த விளையாட்டை விளையாடிப் பார்க்க வைக்கும்.

ஹாக்கி அழகான விளையாட்டு. ஹாக்கியை ஏன் விளையாடுகிறோம் என்பதற்கான காரணத்தை நாங்கள் வழங்கிவிட்டோம், விளையாடிப் பாருங்கள் இளைஞர்களே.

இன்றைய 60 நிமிடங்களுக்காக நான் அனைத்தையும் தயார் செய்தேன், என்னை முழுமையாக அர்ப்பணித்தேன். கடந்த 21 ஆண்டுகளாக ஹாக்கி விளையாடுகிறேன். எனக்குள் நான் சொல்லிக்கொண்டது என்னவென்றால், உன்னுடைய 21 ஆண்டு அனுபவத்தை 60 நிமிடங்களுக்குப் பயன்படுத்து என்று உற்சாகப்படுத்தினேன்.

கடைசி நேர பெனால்டி கார்னரின்போது இதைத்தான் எனக்குள் கூறி உற்சாகப்படுத்தினேன். ஸ்ரீ 21 ஆண்டுகள் உழைப்பு, இதுதான் உனக்குத் தேவை, ஒரு கோலை மட்டும் தடுத்துவிடு என்று எனக்குள் கூறிக்கொண்டேன். அதைச் செய்துவிட்டேன். இப்போது வெண்கலத்தை வென்றுவிட்டோம்.

குடும்பத்துடன் ஸ்ரீஜேஷ்| படம் உதவி: ட்விட்டர்

அணியில் நான் மூத்த வீரர், கோல்கீப்பர், அணியில் ஒரு உறுப்பினர் என்ற முறையில் பந்தைத் தடுப்பது என்பது என்னுடைய முக்கியக் குறிக்கோள். 2-வது என்னுடைய வீரர்களுக்கு நான் வழிகாட்ட வேண்டும், தடுப்பாட்டத்தை வலிமைப்படுத்த வேண்டும், அதோடு வீரர்களையும் உற்சாகப்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் எனது கடமையை நேர்மையாகச் செய்துவிட்டேன்.

நான் என்னுடைய வீட்டுக்குச் சென்ற பின்புதான் நான் முழுமையாகத் திருப்தி அடைய முடியும். அதற்காகத்தான் காத்திருக்கிறேன். என்னுடைய தந்தையை தொலைப்பேசியில் அழைத்துப் பேசினேன். இந்த முன்னேற்றத்துக்கு அவர்தான் காரணம், நான் சாதித்துவிட்டேன் என்று அவரிடம் சொல்ல வேண்டும். இந்தப் பதக்கம் என் தந்தைக்குரியது''.

இவ்வாறு ஸ்ரீஜேஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x