Last Updated : 05 Aug, 2021 07:33 AM

 

Published : 05 Aug 2021 07:33 AM
Last Updated : 05 Aug 2021 07:33 AM

பும்ரா, ஷமி மிரட்டல்: 45 ரன்களுக்கு 7 விக்கெட்; இந்தியாவின் 4 முனை தாக்குதலில் 183 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து

விக்கெட் வீழ்த்திய மகிழச்சியில் ஆர்ப்பரிக்கும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி | படம் உதவி ட்விட்டர்

நாட்டிங்ஹாம்


பும்ரா, ஷமியின் துல்லியமான பந்துவீச்சு, தாக்கூர், சிராஜின் ஸ்விங் ஆகியவற்றால் நாட்டிங்ஹாமில் நேற்று தொடங்கிய இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்களில் 183 ரன்களில் சுருண்டது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 13 ஓவர்களில் 21 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா 9 ரன்னிலும், ராகுல் 9 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியைவிட 162 ரன்கள் பின்தங்கியுள்ளது இந்திய அணி.

பேட்ஸ்மேன்கள் பொறுப்பு

இங்கிலாந்து அணியை குறைந்த ஸ்கோருக்குள் சுருட்டி இந்தியப் பந்துவீச்சாளர்கள் தங்களின் பங்களிப்பை சரியாகச் செய்துவிட்டார்கள். இனிேமல் பேட்ஸ்மேன்கள் தங்களின் பொறுப்பை உணர்்ந்து பேட் செய்ய வேண்டும். இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் முதல் 25 ஓவர்களில் விக்கெட் விழாமல் ராகுல், ரோஹித் சர்மா தாக்குப்பிடித்துவிட்டால், அதன்பின் ஸ்கோரை உயர்த்துவது எளிதாகும்.

விராட்-ஆன்டர்ஸன்

இந்திய அணியை முன்னிைலை பெறவிடாமல் இங்கிலாந்தின் பிராட், ஆன்டர்ஸன், ராபின்ஸன், ஷாம் கரன் ஆகியோர் ஸ்விங் பந்துவீச்சில் மிரட்டல் விடுக்கலாம். இதை இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளித்து ஆட வேண்டும். குறிப்பாக விராட் கோலி, ஆன்டர்ஸன் பந்தை எவ்வாறு ஆடப் போகிறார் என்பதைப் பார்க்கவே ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. ஒவ்வொரு டூரிலும் விராட் கோலியின் விக்கெட் ஆன்டர்ஸனிடம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது, இந்த முறை கோலி தப்பிப்பாரா என்பது இன்று தெரிந்துவிடும்.

ஆஃப் சைட் ரோஹித்

ரோஹித் சர்மா ஆஃப் சைடில் மோசமாக வீசப்படும்பந்தை மட்டும் அடித்தாலே போதுமானது, மிடில் ஸ்டெம்பிலிலுந்து பிட்ச் ஆகி விலகும் பந்தை தேவையில்லாமல் தொட்டால் ரோஹித் ஆட்டம் தொடங்கியபின் சிறிதுநேரம் கூட நீடிக்கமாட்டார்கள். முதல்நாள் ஆட்டத்தில் பலமுறை இதேபோன்ற பந்தை ஆன்டர்ஸனும், பிராடும் வீசினார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இரு நாட்கள் இந்திய அணி பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸை விளையாடி அதிக ரன்கள் முன்னிலை எடுத்துவிட்டாலே மனரீதியாக இங்கிலாந்து அணி குலைந்துவிடுவார்கள். இந்த வாய்ப்பைச் சரியாக இந்தியபேட்ஸ்மேன்கள் பயன்படுத்த வேண்டும்.

அதிர்ச்சி

பேட்டிங் செய்ய மிகக் கடினமாக இருக்கும் இந்த ஆடுகளத்தில் டாஸ் வென்று இங்கிலாந்து கேப்டன் ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆடுகளத்தின் புற்களைப் பயன்படுத்திக் கொண்ட இந்தியப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, ஷமி இருவரும் தொடகத்திலேயே விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

பும்ரா, ஷமி இருவரும் சேர்ந்து மொத்தம் 37 ஓவர்கள் வீசி, 74 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை ஆட்டம் தொடங்கிய 25 ஓவர்கள் வரையிலும், மாலை நேர தேநீர் இடைவேளைக்குப்பின் 20 ஓவர்கள்வரையிலும்தான் டியூக் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். ஏனென்றால் காலை நேரத்தில் எடுக்கப்பட்ட புதிய பந்து, மாைலயில் பயன்படுத்தப்படும் புதிய பந்தால் ஸ்விங் அதிகமாகி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழப்பார்கள்.

4 முனைத் தாக்குதல்

இதை இந்திய பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு தேநீர் இடைவேளைக்குப்பின் விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினர். அதிலும் இந்திய வீரர்களின் 4 முனைத்தாக்குதலை இங்கிலாந்து அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை.

முகமது ஷமி பந்தை மிடில் ஸ்டெம்பிலிருந்தும், ஆஃப் ஸ்டெம்பிலிருந்து ஸ்விங் செய்ய வைத்து திணறவைத்தார், பும்ராவின் அதிவேக ஸ்விங் யார்க்கர்கள் ஒருபுறம், தாக்கூரின் துல்லியமான அவுட் ஸ்விங், இன்கட்டர், சிராஜின் துல்லியமான லைன் லென்த் போன்றவற்றால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்தனர்.

ஒரு கட்டத்தில் 138 ரன்களுக்கு 3 விக்ெகட்டுகளை மட்டும் இழந்திருந்த இங்கிலாந்து அணி அடுத்த 45 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது.

ரூட், கரன் காப்பாற்றினர்

இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் நிதானமாக ஆடி 69 ரன்களில் தாக்கூர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ஷாம் கரன் அதிரடியாக பேட்டைச் சுழற்றி 27ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றவகையில் இங்கிலாந்து தரப்பில் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த வீரரும் பேட்டிங் செய்யவில்லை.

தொடக்கமே ஷாக்

போட்டி தொடங்கும் போதே இங்கிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸ் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் வெளியேறினார். சிப்ளி, கிராளி 42 ரன்கள்வரை சேர்த்துப் பிரிந்தனர். கிராளி 27 ரன்னில் சிராஜ் வேகத்தில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்துவந்த கேப்டன் ரூட், சிப்ளியுடன் சேர்ந்து நிதானமாக ஆடினார். சிப்ளி 18ரன்னில் ஷமி பந்துவீச்சலி் ராகுலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 4-வது விக்கெட்டுக்கு ரூட், பேர்ஸ்டோ கூட்டணி சேர்ந்தனர். 23 ஓவர்கள் வரை நிலைத்து இருவரும் பேட் செய்து, 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பேர்ஸ்டோ 29 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஷமி பந்துவீச்சில் மறுக்கமுடியாதவகையில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

நல்லாத்தானே இருந்தீங்க...

50 ஓவர்களின்போது தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 138ரன்கள் சேர்த்து ஓரளவுக்கு வலுவாகத்தான் இருந்தது.

அதன்பின் இங்கிலாந்து பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. லாரன்ஸ் டக்அவுட்டில் ஷமியிடமும், பட்லரும் டக்அவுட்டில் பும்ராவிடமும் விக்கெட்டுகளை இழந்தனர். அரைசதம் அடித்த நிலையில் ஆடிய ரூட் 64 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

ராபின்ஸன் டக்அவுட்டில் தாக்கூர்பந்துவீச்சில் ஷமியிடம் விக்கெட்டை இழந்தார். கடைசி இரு வீரர்களான ஸ்டூவர்ட் பிராட், ஆன்டர்ஸனுக்கு தண்ணி காட்டிய பும்ரா இருவரின் விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

பொதுவாக இங்கிலாந்தின் டெயில்என்டர்கள் பேட்ஸ்மேன்கள்தான் பல போட்டிகளில் நின்று விளையாடியுள்ளனர், இந்திய அணியும் பல போட்டிகளில் டெயில்என்டர் பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்யமுடியாமல் திணறியுள்ளது. அந்த பிரச்சினை இந்த ஆட்டத்தில் வராமல் பும்ரா பார்த்துக்கொண்டார். 65.4 ஓவர்களில் இங்கிலந்து அணி 183 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

ரோஹித் இலக்கு

அதன்பின் இந்திய அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ரோஹித் சர்மா, ராகுல் ஆட்டத்தொடங்கினர்.ஆன்டர்ஸன், பிராட், ராபின்ஸன் மூவரும் மாறி மாறி பந்துவீசி ஸ்விங் செய்தபோதிலும் ராகுல், ரோஹித் கவனமாகப் பேட் செய்தனர். பல பந்துகள் பீட்டன் ஆனபோதிலும் ரோஹித் சர்மா மிகவும் கூலாக பேட் செய்தார். வழக்கமாக ஆஃப் சைடுக்கு வெளியே செல்லும் பந்தை தொட்டு சிக்கிக் கொள்ளும் தவறை நேற்று ரோஹித் சர்மா செய்யவில்லை.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x