Published : 04 Aug 2021 03:59 PM
Last Updated : 04 Aug 2021 03:59 PM

ஒலிம்பிக் மல்யுத்தம்: வெள்ளி நிச்சயம், தங்கம் லட்சியம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரவி குமார்

இந்திய வீரர் ரவி குமார் தாஹியா | படம் உதவி ட்விட்டர்

டோக்கியோ


டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மல்யுத்தப் பிரிவில் இந்திய வீரர் ரவி குமார் தாஹியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஆடவர் மல்யுத்தப் பிரிவில் 57 கிலோ எடைக்கான ப்ரீ ஸ்டைலில் கஜகஸ்தான் வீரர் நுர்இஸ்லாம் சனாயேவை 7-9 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு ரவி குமார் தகுதி பெற்றுள்ளார்.

இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக்கில் குறைந்தபட்சம் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது, முயன்றால் தங்கமும் கிடைக்க வாய்ப்புள்ளது.

தொடக்கத்தில் ரவி தாஹியா சிறப்பாகச் செயல்பட்டு 2-1 என்ற கணக்கில் முன்னிலையி்ல் இருந்தார். அதன்பின் பதிலடி கொடுத்த கஜகஸ்தான் வீரர் நூர்இஸ்லாம் விரைவாகப் புள்ளிகளை எடுத்து 9-2 என்ற கணக்கில் முன்னேறினார்.

இதற்குபதிலடி கொடுத்த ரவி குமார், நூர்இஸ்லாமை சாய்த்து, புள்ளிகளைப் பெற்று 5-9 என்ற கணக்கில் முன்னேறினார். இறுதியில் நூர்இஸ்லாமை 7-9 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ரவிகுமார் தகுதி பெற்றார். ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருக்கும்போது புள்ளிகளைப் பெற்று பைனலை ரவிகுமார் உறுதி செய்தார்.

86 கிலோ எடைப்பிரிவுக்கான ப்ரீ ஸ்டைல் பிரிவுக்கான அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் தீபக் பூனியாவை 0-10 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்க வீரர் டேவிட் மோரிஸ் டெய்லர் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். 2018-ம் ஆண்டு உலக சாம்பியன் மற்றும் நடப்பு பான் அமெரிக்க சாம்பியனான டெய்லரை வீழத்துவது என்பது தீபக்கிற்கு எளிதானது அல்ல. மல்யுத்தத்தில் எதிர்போட்டியாளரை பிடிக்குள் சிக்கவைப்பதும், தான் சிக்கிக்கொண்டால் வெளியே வரும் நுட்பங்களை அதிகமாக அறிந்தவர் டெய்லர். ஆதலால், டெய்லரை வீழ்த்துவது சாதரணமானது அல்ல.

வெண்கலத்துக்கான போட்டியில் இந்திய வீரர் பூனியா விளையாட உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x