Last Updated : 04 Aug, 2021 09:38 AM

 

Published : 04 Aug 2021 09:38 AM
Last Updated : 04 Aug 2021 09:38 AM

கரீபிய மண்ணில் கடைசி டி20 போட்டி: விடைபெற்றார் டுவைன் பிராவோ

மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ | கோப்புப்படம்

ஜார்ஜ்டவுன்

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடக்க இருந்த 3-வது டி20 போட்டிதான் கரீபிய மண்ணில் மே.இ.தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ பங்கேற்ற கடைசி டி20 போட்டியாக அமைந்தது.

ஆனால், மழை காரணமாக கயானாவில் நேற்று நடக்க இருந்த பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டி ரத்தானதால், 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை வென்றது.

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து பிராவோ ஓய்வு பெறவில்லை என்றாலும், கரிபிய மண்ணில் இனிமேல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடமாட்டார். வரும் டி20 உலகக் கோப்பையோடு டி20 போட்டிகளில் இருந்து பிராவோ ஓய்வு பெற உள்ளார் என்று கேப்டன் பொலார்ட் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், லீக் போட்டிகளில் தொடர்ந்து பிராவோ விளையாடுவார்.

டெத் பவுலர், தேவையான நேரத்தில் ஆல்ரவுண்டர் அவதாரம் எடுக்கும் பிராவோ மே.இ.தீவுகள் அணியின் மிகப்பெரிய சொத்தாகும். மே.இ.தீவுகள் 2012 மற்றும் 2016ம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய அணியில் இடம் பெற்றிருந்த பிராவோ அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

டி20 போட்டிகளில் டெத் பவுலர் என்று வர்ணிக்கப்படும் பிராவோ மே.இ.தீவுகள் அணிக்காக 85 டி20 போட்டிகளி்ல விளையாடி 76 விக்கெட்டுகளையும், 1,229 ரன்கள் குவித்துள்ளார். 164 ஒருநாள் போட்டிகளில் 2,968 ரன்களும் 199 விக்கெட்டுகளையும், 40 டெஸ்ட் போட்டிகளில் 2,200 ரன்களும் 86 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

கடந்த மாதம் தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பிராவோ வீழ்த்தியதுதான் சிறந்தபந்துவீச்சாக அமைந்தது.

கரீபிய மண்ணில் தனது கடைசி டி20 போட்டி குறித்து போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரத்துக்கு முன்புதான் தனது சக அணி வீரர்களிடம் டுவைன் பிராவோ இதைப் பகிர்ந்துள்ளார். அதன்பின் இந்தத் தகவலை மே.இ.தீவுகள் கிரிக்ெகட் வாரியம் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது.

மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட் வீடியோவில் கூறுகையில் “ எங்கள் அணியின் மிகப்பெரிய ஜாம்வான்களில் ஒருவருக்கு வாழ்த்துக் கூற இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன். டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 பிரிவுகளிலும் பிராவோ விளையாடியுள்ளார், இதில் டெஸ்ட், ஒருநாள் போட்டியில் மட்டும் நீண்டகாலத்துக்குமுன்பே ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், கரிபீய மண்ணில் இன்று நடக்கும் கடைசிப் போட்டிதான் பிராவோவின் சர்வதேச கடைசிடி20 போட்டியாக இருக்கப் போகிறது. இதை எதிர்நோக்கி இருக்கிறோம்.ஆனால், டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின்புதான் டி20 போட்டியில் இருந்து பிராவோ ஓய்வு பெறுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

மே.இ.தீவுகள்அணியின் முன்னாள் வீரர் இயான் பிஷப் ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச்செய்தியில் “ கரிபீய மண்ணில், மே.இ.தீவுகள் அணிக்காக பிராவோ தனது கடைசி சர்வதேச டி20 போட்டியில் விளையாடுகிறார். டி20 கிரிக்ெகட் வீரர்களில் மிகச்சிறந்தவர்களில் ஒருவரான பிராவோவை கொண்டாட வேண்டும்.நான் கிரேட் என்ற வார்த்தையை லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்களிடம் பெரிய டெஸ்ட் போட்டி வீரர்கள் இருந்தார்கள், ஒருநாள் போட்டிக்கான மிகப்பெரிய வீரர்கள் இருந்தார்கள், அந்த வகையில் டி20 போட்டியில் மிகப்பெரியவர் பிராவோ என்பதில் சந்தேகமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x