Last Updated : 03 Aug, 2021 04:11 PM

 

Published : 03 Aug 2021 04:11 PM
Last Updated : 03 Aug 2021 04:11 PM

புஜாரா பேட்டிங்; அணி நிர்வாகம் நம்பாவிட்டால் வேறு வீரர் கொண்டுவரப்படுவார்: சுனில் கவாஸ்கர் சூசகம்

இந்திய அணி வீரர் சத்தேஸ்வர் புஜாரா | கோப்புப் படம்.

மும்பை

இந்திய அணி வீரர் சத்தேஸ்வர் புஜாராவுக்கு அவரின் பேட்டிங் மீது அதீதமான நம்பிக்கை இருக்கலாம். ஆனால், அணி நிர்வாகம் நம்பாவிட்டால் வேறு வீரர் உள்ளே கொண்டுவரப்படுவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சூசுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை டிரன்ட்பிரட்ஜில் தொடங்குகிறது. இந்திய அணியில் விளையாடும் 11 பேரில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இதில் அனுபவ வீரர் சத்தேஸ்வர் புஜாரா, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பின் எந்த டெஸ்ட்டிலும் சரியாக விளையாடவில்லை.

இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் புஜாரா சொதப்பினார். புஜாரின் ஆமை வேக பேட்டிங்கும், அளவுக்கு அதிகமாக பந்துகளை வீணடிப்பதும் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யாமல் மந்தமாக விளையாடுவது, மோசமான பந்துகளை பவுண்டரி அடிக்காமல் அதைக்கூட ஸ்ட்ரோக் வைப்பது என்று புஜாராவின் சமீபத்திய பேட்டிங் வெறுப்பேற்றுகிறது.

புஜாராவின் சமீபத்திய எரிச்சலூட்டும் பேட்டிங் குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''புஜாராவின் பேட்டிங் சில நேரங்களில் சர்வதேசத் தரத்தில் இருக்கிறது. அந்த பேட்டிங் முறையால்தான் அவர் நம்பிக்கை பெறுகிறார். ஆனால், புஜாராவுக்கு அவரின் பேட்டிங் சில நேரங்களில் பயனளிக்கும். இந்தியாவுக்குள் வேலை செய்யும். பல போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால், வெளிநாடுகளில் அது எடுபடுமா எனத் தெரியாது.

புஜாராவுக்கு அவரின் பேட்டிங் எந்த அளவுக்கு நம்பிக்கையளிக்கிறதோ அதுபோல் அணி நிர்வாகத்துக்கும் நம்பிக்கையளிக்க வேண்டும். அணி நிர்வாகத்துக்கு நம்பிக்கை வராவிட்டால் அவருக்கு பதில் வேறு யாரையாவது அணிக்குள் கொண்டுவர ஆலோசிப்பார்கள்.


என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக கே.எல்.ராகுலைக் களமிறக்க வேண்டும். பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்து கே.எல்.ராகுல் அதிகமான நம்பிக்கையுடன் உள்ளார். ஆதலால், புஜாராவை டாப் ஆர்டரில் விளையாட வைக்காமல் ராகுலைக் களமிறக்க வேண்டும்.

கடைசியாக 2018-ம் ஆண்டு ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியில் ராகுல் சதம் அடித்தார் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆதலால், தொடக்க ஆட்டக்காரராக ராகுலைக் களமிறக்குவது நல்ல பயனளிக்கும்.

5 பேட்ஸ்மேன் ஒரு விக்கெட் கீப்பர் என்ற ரீதியில் முடிவெடுத்தால், ரிஷப் பந்த்தைத் தேர்வு செய்யலாம். ஆனால், விளையாடும் இடத்தைப் பொறுத்து விக்கெட் கீப்பரும் மாறுவார். ஆதலால், விக்கெட் கீப்பிங் திறமை மிக முக்கியம். ஆதலால், விருதிமான் சாஹா போன்ற ஒருவர் அணிக்குள் வருவது நலம்''.

இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x