Last Updated : 03 Aug, 2021 07:39 AM

 

Published : 03 Aug 2021 07:39 AM
Last Updated : 03 Aug 2021 07:39 AM

#Ind vs Eng முதல் டெஸ்டிலிருந்து மயங்க் அகர்வால் நீக்கம்: சிராஜ் வீசிய பந்து ஹெல்மெட்டில் பட்டதால் சுருண்டு விழுந்தார்


இந்திய அணியின் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் பயிற்சியின் போது வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்து ஹெல்மெட்டில் பட்டதால் சுருண்டு விழுந்தார். இதனால் நாளை தொடங்கும் இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து அகர்வால் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை டிரன்ட்பிரிட்ஜில் தொடங்குகிறது. இதற்கான பயிற்சியில் இரு அணி வீரர்களும் தீவிரமாக உள்ளன. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், ஷுப்மான் கில், ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக விலகியதையடுத்து, பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டனர். இவர்கள் இலங்கையிலிருந்து நேரடியாக லண்டன் வருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சியில் நேற்று இந்திய வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்தை மயங்க் அகர்வால் எதிர்கொண்டார். அப்போது பவுன்ஸராக சிராஜ் வீசிய பந்தை அகர்வால் அடிப்பதற்குள் பந்து அவரின் ஹெல்மெட்டில் பட்டு தெறித்தது.

இதனால், மயங்க் அகர்வால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதைப் பாரத்த சிராஜ் உள்ளிட்ட சக வீரர்கள் விரைந்து வந்து மயங்க் அகர்வாலைத் தேற்றினர். அணியின் மருத்துவர், உடற்பயிற்சி வல்லுநர் வந்து மயங்க் அகர்வாலுக்கு முதலுதவி அளித்து, ஓய்வறைக்கு அழைத்துச் சென்றனர்.

ஐசிசி விதியின்படி,ஒரு வீரருக்கு ஹெல்மெட்டில் பந்துபட்டால் அவருக்கு கன்கஸன் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் அகர்வாலுக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளதால், முதல் டெஸ்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், “ டிரன்ட்பிரிட்ஜில் வலைப்பயிற்சியி்ன்போது சிராஜ் வீசிய பந்து மயங்க் அகர்வால் ஹெல்மெட்டில் பட்டுள்ளது. மயங்க் அகர்வாலைப் பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினர் அவருக்கு கன்கஸன் பரிசோதனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். அகர்வால் தற்போது நலமுடன் உள்ளார், இருப்பினும் அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் துணைக் கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில் “அணியில் உள்ள 21வீரர்களும் நலமுடன், உடற்தகுதியுடன் விளையாடத் தயாராக உள்ளனர். விரைவில் விளையாடும் 11 பேர் கொண்ட அணி அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மயங்க் அகர்வால் இல்லாத சூழலில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து கே.எல்.ராகுல் தொடங்குவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. ஒருவேளை நடுவரிசையை பலப்படுத்த ராகுல் பயன்படுத்தப்பட்டால், ஹனுமா விஹாரி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்.அணியில் கூடுதல் ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x