Last Updated : 01 Aug, 2021 07:13 PM

 

Published : 01 Aug 2021 07:13 PM
Last Updated : 01 Aug 2021 07:13 PM

ஒலிம்பிக் ஹாக்கி: சபாஷ்....49 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

பிரிட்டன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை கடத்திய இந்திய வீரர்கள் | படம் உதவி ட்விட்டர்

டோக்கியோ


டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கிப் பிரிவில் 49 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

டோக்கியோவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

கடைசியாக கடந்த 1972-ம் ஆண்டு முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கில் வென்றது. அதன்பின் 49 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் அரையிறுதிக்கு மன்பிரித் சிங் தலைமையிலான இந்திய அணி முன்னேறியிருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டுரியோ ஒலிம்பிக்கில் பெல்ஜியம் அணியிடம் காலிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 1980ம் ஆண்டுக்குப்பின் ஒலிம்பிக்கில் இந்திய அணி பதக்கம் வெல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய ஹாக்கி அணியின் சுவர் ஸ்ரீஜேஷ்

இந்தியத் தரப்பில் தில்பிரித் சிங் 7-வது நிமிடத்திலும், 16-வது நிமிடத்தில் குர்ஜந்த் சிங்கும், 57-வது நிமிடத்தில் ஹர்திக் சிங்கும் கோல் அடித்தனர். பிரிட்டன் தரப்பில் 45-வது நிமிடத்தில் பிலிப் ரோப்பர் கோல் அடித்தார்.

ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இந்திய வீரர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டனர். ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் பிரிட்டன் அணியினருக்கு கிடைத்த பெனால்டி கார்னரை கோலாக்கவிடாமல் இந்திய அணியினர் தடுத்தனர். 7-வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங்கிடம் இருந்து கிடைத்த பாஸை சரியாகப் பயன்படுத்திய தில்பிரித் சிங் பிரிட்டன் அணியினரை ஏமாற்றி அணிக்கு முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

15-வது நிமிடத்தில் மன்பிரித்சிங்கிற்கு கோல் அடிக்க வாய்ப்புக் கிடைத்தது ஆனால், அதை தவறவிட்டார். இதனால் முதல் கால்பகுதி நேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.
2-வது கால்பகுதிநேரம் தொடங்கிய உடனே, பிரிட்டன் கோல்கீப்பர் பெய்னேவை ஏமாற்றி, இந்திய வீரர் குர்ஜந்த் சிங் கோல் அடித்து இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறச் செய்தார்.

அதன்பின் இந்திய வீரர்கள் உற்சாகத்தில் அடுத்தடுத்து கோல் அடிக்க முயன்றனர். 25-வது நிமிடத்தில் நிலகந்தா சர்மா பந்தை தட்டிச் சென்று கோல்வரை சென்றுவிட்டார், ஆனால், திடீரென பிரிட்டன் வீரர்கள் தடுப்புச்சுவர் போல் வந்து கோல் அடிப்பதைத் தடுத்தனர்.

2-வது கால்பகுதி நேர முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல்கணக்கில் முன்னிலையுடன் இருந்தது. 3-வது கால்பகுதி நேரத்தில் 45-வது நிமிடத்தில் பிரிட்டன் வீரர் பிலிப் ரோப்பர் அணிக்கு முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

4-வது மற்றும் கடைசிக் கால்பகுதி ஆட்டம் தொடங்கியது. பிரிட்டன் வீரர்களுக்கு கோலை சமன் செய்யவேண்டியநெருக்கடி, பிரிட்டனை கோல் அடிக்கவிடாமல் தடுக்கும் அழுத்தம் என இரு அணி வீரர்களும் பரபரப்புடன் களத்தில் இறங்கினர்.

47-வது நிமிடத்தில் பிரிட்டன் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்புக் கிடைத்தும்அணி வீரர்களுக்கு இடையே சரியான புரிதல் இல்லாததால் அந்த வாய்ப்பை சொதப்பினர். 52-வது நிமிடத்தில் பிரிட்டன் அணியினர் பந்தை ஆவேசமாக கடத்திச் சென்று கோல் அடிக்க முயன்றனர், ஆனால், இந்திய வீரர் சிம்ரன்ஜித் சிங் லாவகமாக உள்ளே சென்று பந்தை டிராக் செய்து கொண்டு சென்று பிரி்ட்டன் வீரர்களின் திட்டத்தை உடைத்தெறிந்தார்.

54-வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் மன்பிரித் சிங்கிற்கு நடுவர் மஞ்சள் அட்டை வழங்கி எச்சரித்தார். 57-வது நிமிடத்தில் இந்திய வீரர் நிலாகந்தா சர்மா அளித்த பாஸை அருமையாகப் பயன்படுத்தி பந்தை வேகமாக கடத்திச் சென்ற இந்திய வீரர் ஹர்திக் சிங் அணிக்கு 3-வது கோலைப் பெற்றுக் கொடுத்தார். இதனால் இந்திய அணி 3-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆனால் ஆட்ட இறுதிவரை பிரிட்டன் அணி மேற்கொண்டு கோல் அடிக்க முடியாததையடுத்து, இந்திய அணி 3-1 என்ற கோல்கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x