Last Updated : 31 Jul, 2021 03:02 PM

 

Published : 31 Jul 2021 03:02 PM
Last Updated : 31 Jul 2021 03:02 PM

இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு: 3 மாதத்தில் 2-வது வீரர்

இலங்கைஅணியின் வேகப்பந்துவீச்சாளர் உதானா | படம் உதவி ட்விட்டர்

கொழும்பு


இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இசுரு உதானா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார்.

12 ஆண்டுகளாக இலங்கை அணியில் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி வந்தபோதிலும் உதானாவுக்கு போதுமான வாய்ப்புகளை வாரியம் வழங்கவில்லை. இதுவரை 21 ஒருநாள் போட்டிகல், 35 டி20 போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகளை மட்டும்தான் உதானா வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 78 ரன்களும், டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 84 ரன்களையும் உதானா சேர்த்துள்ளார்.

கடைசியாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் உதானா விளையாடிவிட்டு ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த 3 மாதத்தில் இலங்கை அணயிலிருந்து ஓய்வு அறிவிக்கும் 2-வது ஆல்ரவுண்டர் உதானா. கடந்த 3 மாதங்களுக்கு முன் திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணியில் உதானா இடம் பெற்றிருந்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் உதானா அறிமுகமாகினார். 2012ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் உதானா அறிமுகமாகினார். வேகப்பந்துவீச்சாளரான உதானா தனது பந்துவீச்சில் அதிகமான வேறுபாடுகளை வெளிப்படுத்தக்கூடியவர், ஸ்லோ-பால் அதிகமாக வீசி பேட்ஸ்மேன்களை அவ்வப்போது திணறடிக்கும் திறமை கொண்டவர்.

தனது ஓய்வு தொடர்பான கடிதத்தை உதானா நேற்று இரவு இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு உதானா அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிடுகையில் “ கிரிக்கெட்தான் எப்போதும் என்னுடைய விருப்பமாக இருக்கும். களத்திலும் வெளியிலும் 100 சதவீத மரியாதையை நான் கிரிக்கெட்டுக்கு வழங்குவேன்.

கிரிக்கெட்டின் உத்வேகம், நாட்டின் பெருமையை எப்போதும் காப்பேன். எனக்கான நேரம் வந்துவிட்டது என்று நம்புவதால், அடுத்த தலைமுறை வீரர்களுக்காக நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்துதான் ஓய்வு பெற்றாலும், உள்நாட்டுப் போட்டிகளிலும், லீக் தொடரிலும் தொடர்ந்து விளையாடுவேன் ” எனத் தெரிவித்துள்ளார்.

ஆல்ரவுண்டர் உதானா கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான காயத்தாலும் பாதி்க்கப்படவி்ல்லை அப்படியிருக்கும் போது அவர் திடீரென ஓய்வு அறிவித்துள்ளது வியப்பாக இருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்ட பதிவில் “ இலங்கையின் டி20, ஒருநாள் அணிக்கு மதிப்புமிக்க வீரராகத் திகழ்ந்த உதானா எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x