Last Updated : 31 Jul, 2021 12:50 PM

 

Published : 31 Jul 2021 12:50 PM
Last Updated : 31 Jul 2021 12:50 PM

ஒலிம்பிக் ஹாக்கி; வரலாறு படைத்த வந்தனா: இந்தியாவுக்கான காலிறுதி வாய்ப்பு கருகவில்லை

ஒலிம்பிக்கில் இந்திய அணிக்காக ஹாட்ரிக் கோல் அடித்த இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா | படம் உதவி: ட்விட்டர்.

டோக்கியோ

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஹாக்கி பிரிவில் இந்திய வீராங்கனை வந்தனா புதிய வரலாறு படைத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.

ஏ பிரிவு அணிகளுக்கு இடையே இன்று நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 3-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி. இந்திய அணி வீராங்கனை வந்தனா ஹாட்ரிக் கோல்கள் அடித்துப் புதிய சாதனை படைத்தார். இதுவரை ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் எந்த வீராங்கனையும் ஹாட்ரிக் கோல் அடித்தது இல்லை. முதல் முறையாக இந்த வரலாற்றை வந்தனா படைத்துள்ளார்.

ஏ பிரிவில் 5 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இந்திய அணி இருக்கிறது. கடைசி இரு லீக் ஆட்டங்களில் இந்திய அணி வென்றதன் மூலம் காலிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் இந்திய அணி வைத்துள்ளது.

காலிறுதி வாய்ப்பைப் பொறுத்தவரை இந்திய அணிக்குத் தற்போது அயர்லாந்து அணிதான் போட்டியாக இருக்கிறது. இன்று மாலை பிரிட்டன் அணிக்கும், அயர்லாந்து அணிக்கும் இடையே நடக்கும் லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணி வென்றுவிட்டால் இந்திய அணி காலிறுதிக்குச் செல்ல முடியாது.

ஆனால், பிரிட்டன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து தோல்வி அடைந்தாலோ அல்லது சமன் செய்தாலோ இந்திய அணிக்கு காலிறுதி வாய்ப்பு கிடைத்துவிடும். இன்று மாலை இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் ஆட்டத்தைப் பொறுத்து இந்திய அணியின் நிலை தெரியவரும்.

இந்திய அணி சார்பில் வந்தனா 4-வது நிமிடம், 17-வது மற்றும் 49-வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனை படைத்தார். 32-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நேகா கோயல் ஒரு கோல் அடித்தார்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் 15-வது நிமிடத்தில் டேரின் கிளாஸ்பே, கேப்டன் எரின் ஹன்டர் 30-வது நிமிடத்திலும், 39-வது நிமிடத்தில் மரிஜென் மரியாஸும் கோல் அடித்தனர்.

கட்டாய வெற்றி பெற்றால்தான் காலிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்ற நெருக்கடியில் இந்திய மகளிர் அணி இன்று களம் கண்டது. முதல் இரு நிமிடங்களில் தென் ஆப்பிரிக்க அணிக்கக் கிடைத்த இரு பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் இந்திய வீராங்கனையினர் தடுத்தனர். குறிப்பாக டிராக்பிளிக்கர் குர்ஜித் கவுர் சிறப்பாகச் செயல்பட்டார்.

இந்திய அணி தனது கோல் கணக்கை 4-வது நிமிடத்தில் தொடங்கியது. வந்தனா முதல் கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். அதன்பின் தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் ஆட்டம் அமைந்தது. 15-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்க அணி கோல் அடித்து 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதனால் முதல் கால்பகுதி ஆட்டம் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றனர்.

2-வது கால்பகுதி ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் வந்தனா கோல் அடித்து 2-0 என்று இந்திய அணியை முன்னிலைப்படுத்தினார். இந்திய அணிக்கு 2-வது கால்பகுதியில் 3 கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதைத் தவறவிட்டனர். அதிலும் ராணி ராம்பால், 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்கத் தவறினார்.

ஆட்டத்தில் 30-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது கோல் அடித்தது. பதிலடியாக நேஹா கோயல் 32-வது நிமிடத்தில் கோல் அடித்து 3-2 என்று இந்திய அணியை முன்னிலைப்படுத்தினார். 3-வது கால் பகுதியில் 39-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை மரிஜென் கோல் அடித்து 3-3 என்ற சமநிலைக்கு வைத்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

ஆட்டத்தின் கடைசி கால்பகுதி ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் வந்தனா தனது ஹாட்ரிக் கோல் அடித்து அணியை 4-3 என்று முன்னிலைப்படுத்தினார். அதன்பின் தென் ஆப்பிரிக்க அணியை கோல் அடிக்கவிடாமல் தடுத்து, இந்திய அணியினர் தடுப்பாட்டம் ஆடினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x