Published : 31 Jul 2021 08:11 AM
Last Updated : 31 Jul 2021 08:11 AM

இந்திய அணியில் மேலும் இரு வீரர்களுக்கு கரோனா :பிரித்வி ஷா, சூர்யாவுக்கு சிக்கல்

கொழும்பு நகரில் தங்கியிருக்கும் இந்திய அணியில் மேலும் இரு வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இங்கிலாந்துக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து, ஷிகர் தவண் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்து தலா 3 ஒருநாள் டி20 போட்டிகளில் விளையாடியது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் 13 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணி இழந்தது.

இதில் 2-வது டி20 ஆட்டம் நடபெறும் முன் இந்திய வீரர்களுக்கு வழக்கமாக எடுக்கப்படும் கரோனா பரிசோதனையில் குர்னல் பாண்டியாவுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருடன் நெருக்கமாக இருந்த 8 வீரர்ளும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.

இதனால், 2-வது மற்றும் 3-வது டி20 போட்டியில், இந்திய அணி பிரதான வீ்ரர்கள் இன்றி விளையாடி தொடரை இழந்தது. தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 8 வீரர்களில் 6 வீரர்களுக்கு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதையடுத்து, இஷான் கிஷன், ராகுல் சஹல், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்தியாவுக்கு திரும்ப உள்ளனர்.

ஆனால், 8 வீர்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் யஜுவேந்திர சஹல், கிருஷ்ணப்பா கவுதம் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கெனவே குர்னல் பாண்டியா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது வீரர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடைய இங்கிலாந்து சென்று இந்திய அணியில் இணைவதற்காக பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்ட 8 வீரர்கள் பட்டியலில் உள்ளவர்கள். இவர்கள் இருவருக்கும் கூடுதலாகப் பரிசோதனை நடத்த கொழும்புஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திய அணியோடு தாயகம் செல்லவில்லை. இருவருக்கும் கரோனா தொற்று இ்ல்லை என உறுதி செய்யப்பட்டபின், இங்கிலாந்துக்கு கொழும்பில் இருந்தவாரே செல்வார்கள்.

குர்ணல் பாண்டியா இன்னும் ஒருவராம் கொழும்பில் தனிமையில் இருக்க வேண்டும், சஹல், கவுதம் ஆகியோர் 10 நாட்கள் வரை தனிமையில் இருக்க வேண்டும். தனிமைக்காலம் முடிந்து இரு கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தபின்புதான் இந்தியாவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதுவரை இலங்கையிலேயே மூவரும் தங்கியிருக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x