Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. பாட்மிண்டனில் பி.வி.சிந்து, குத்துச்சண்டையில் சதீஷ் குமார் ஆகியோர் கால் இறுதிச் சுற்றில் நுழைந்தனர். 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்தார்.
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் திருவிழாவின் 7-வது நாளான நேற்று, ஆடவர் ஹாக்கியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் வருண், விவேக் சாகர், ஹர்மான்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் இந்திய அணி கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
மகளிருக்கான குத்துச்சண்டை யில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 2-3 என்ற கணக்கில் கொலம்பியாவின் இங்க்ரிட் லோரெனா வலென்சியாவிடம் தோல்வி அடைந்தார். ஆடவருக்கான பாய்மரப்படகில் ஸ்கீப் 49இஆர் பிரிவில் இந்தியாவின் கே.சி.கணபதி, வருண் தக்கர் ஜோடி 5-வது சுற்றில் 16-வது இடமும், 6-வது சுற்றில் 7-வது இடமும் பிடித்தனர். ஒட்டுமொத்தமாக 76 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய ஜோடி 17-வது இடத்தில் உள்ளது.
மகளிருக்கான பாய்மரப்படகு லேசர் ரேடியல் பிரிவில் இந்தியாவின் நேத்ரா குமணன் 7-வது சுற்றில் 22-வது இடமும், 8-வது சுற்றில் 20-வது இடமும் பிடித்தார். ஆடவருக்கான லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் இந்தியாவின் விஷ்ணு சரவணன் 7-வது சுற்றில் 27-வது இடமும், 8-வது சுற்றில் 23-வது இடமும் பிடித்தார்.
மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் மனு பாகர் 292 புள்ளிகளுடன் 5-வது இடமும் ரஹி சர்னோபாத் 287 புள்ளிகளுடன் 25-வது இடமும் பிடித்தனர். இந்த தகுதிச் சுற்றானது இரு நிலைகளை உள்ளடக்கியது. இதில் விரைவு நிலை இன்று நடைபெறுகிறது.
மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதிச் சுற்றில் இன்று 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியுடன் இன்று மோதுகிறார் சிந்து.
ஆடவருக்கான குத்துச்சண்டையில் 91 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் 4-1 என்ற கணக்கில் ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை தோற்கடித்து கால் இறுதிச் சுற்றில் நுழைந்தார்.
வில்வித்தையில் ஆடவருக்கான தனிநபர் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் அதானு தாஸ் 6-5 என்ற கணக்கில் கொரியாவின் ஓ ஜின்-ஹைக்கை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆடவருக்கான நீச்சலில் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் அரை இறுதிக்கு தகுதிபெறத் தவறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT