Last Updated : 24 Jul, 2021 04:35 PM

 

Published : 24 Jul 2021 04:35 PM
Last Updated : 24 Jul 2021 04:35 PM

ரியோ ஒலிம்பிக்கில் தோற்றவுடன் ஓய்வு பெற விரும்பினார்: மனம்திறக்கும் மீராபாய் சானுவின் தாய்

இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு | கோப்புப்படம்

புதுடெல்லி

2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கிற்கு செல்வதற்கு முன் என் நகையை விற்று மீராபாய் சானுக்கு தோடு வாங்கிக்கொடுத்தேன், ஆனால், தோற்றவுடன் ஓய்வு பெற விரும்பினார் என்று பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவின் தாயார் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. மகளிருக்கான 49-கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீாரங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டில் கர்னம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்றபின் தற்போது பளுதூக்குதலில் 2-வது வீராங்கனையாக சானு பதக்கம் வென்றுள்ளார்.

49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதலில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 202 கிலோ(87கிலோ ஸ்நாட்ச், 115கிலோ க்ளீன் ஜெர்க்) தூக்கி 4 விதமான முற்சிகளிலும் அசத்தி வெள்ளியை உறுதி செய்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் பங்கேற்க இந்திய அளவில் தகுதி பெற்ற முதல் வீராங்கனையும் மீராபாய் சானுதான். அதுமட்டுமல்லாமல் பளுதூக்குதல் பிரிவில் மகளிர் பிரிவில் பங்கேற்ற ஒரே வீராங்கனையும் சானு மட்டும்தான். கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்த சானு, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் நாடு திரும்புகிறார்.

மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள நாங்பாக் காக்சிங் கிராமத்தைச் சேர்ந்தவர் மீராபாய் சானு. சானுவுக்கு 3 சகோதரிகள், 2 சகோதரர்கள். ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் சானு வெள்ளி வென்றசெய்தி கேட்டு சானுவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் உள்ளனர். சானுவின் சொந்த கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மீராபாய் சானுவின் தாயார் ஷாய்கம் டோம்பி லீமா தனது மகளின் வெற்றி குறித்து உருக்கமாகப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் போது, ஒலிம்பிக் வளையத்தைப் போல் மீராபாய் சானுவின் காதில் தோடு அணிவிக்க விரும்பினேன். அதற்காக என்னுடைய நகைகளை விற்று தோடு வாங்கி என் மகளுக்கு அணிவித்தேன்.

தாய் லீமாவுடன் மீராபாய் சானு

ஆனால், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் சானு தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் மனம் நொந்தநிலையில் பளுதூக்குதலில் இருந்து ஓய்வு பெறவும் விரும்பினார். ஆனால், அனைவருக்கும் அவருக்கு ஊக்கமளித்து மீண்டும் பயிற்சியில் ஈடுபடவைத்தோம்.

இன்று டோக்கியோ ஒலிம்பில் சானு வெள்ளி வென்றதைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது சானுவின் காதில் நான் வாங்கிக்கொடுத்த தோடு அணி்ந்திருந்தது எனக்கு இன்னும் மகிழ்ச்சியை அளித்தது. நான் வாங்கிக்கொடுத்ததோடுதான் அவருக்கு அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் பெற்றுக்கொடுத்துள்ளது.
என் மகள் வெள்ளிப் பதக்கம் வென்ற காட்சியைப் பார்த்தபோது, என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவருடைய தந்தை கீர்த்தி மேதியும் கண்கலங்கி ஆனந்தக்கண்ணீர்விட்டார். சானுவின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு.

ஒலிம்பிக்கில் இந்த முறை தங்கம் வெல்வேன் அல்லது ஏதாவது பதக்கத்துடன்நாடு திரும்புவேன் என்று சானு கூறியிருந்தார். அதற்காக ஒவ்வொரு காத்திருந்தபோது அது நடந்துவிட்டது. வெகுதொலைவில் வசித்துவரும் உறவினர்கள்கூட சானுவின் விளையாட்டைக்காண எங்கள் வீட்டுக்கு வந்து இரவிலிருந்து எங்களுடன் தங்கியுள்ளனர்.

உள்ளூர் மக்கள் இன்று காலை எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். எங்கள் வீட்டு முற்றத்தில் தொலைக்காட்சியை வைத்துவிட்டோம். ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட மக்கள் அமர்ந்து சானு பளுதூக்குவதைப் பார்த்தார்கள். திருவிழா போன்று இருந்தது. சானு வெள்ளி வென்றவுடன் ஏராளமான பத்திரிகையாளர்கள் வந்துவிட்டனர். இதுபோன்று நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை

பெரும்பாலான நாட்களில் சானு வீட்டுக்கே வரமாட்டார். பயிற்சிக்கு செல்வதாகக் கூறி சென்றுவிடுவார். இதனால் வாட்ஸ்குரூப் ஏற்படுத்தி அதில்தான் பேசிக்கொள்வோம். இன்றுகாலை கூட வீடியோகாலில் அனைவரிடமும் சானு பேசிவிட்டு, ஆசி பெற்றார்

இவ்வாறு சானுவின் தாயார் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x