Published : 24 Jul 2021 03:00 PM
Last Updated : 24 Jul 2021 03:00 PM

என் தாய்நாட்டுக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறேன்; கனவு நனவாகியது: மீரா பாய் சானு உருக்கம்

இந்திய வீராங்கனை மீராபாய் சானு | கோப்புப்படம்

டோக்கியோ


ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் எனும் என்னுடைய கனவு நனவாகியுள்ளது, இந்த வெற்றியை என் தேசத்துக்கு அர்ப்பணிக்கிறேன் என்று பளுதூக்குதலில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. மகளிருக்கான 49-கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீாரங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டில் கர்னம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்றபின் தற்போது பளுதூக்குதலில் 2-வது வீராங்கனையாக சானு பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லமல் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனையும் சானு என்பது குறிப்பிடத்தக்கது.

49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதலில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 202 கிலோ(87கிலோ ஸ்நாட்ச், 115கிலோ க்ளீன் ஜெர்க்) தூக்கி 4 விதமான முயற்சிகளிலும் அசத்தி வெள்ளியை உறுதி செய்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் பங்கேற்க இந்திய அளவில் தகுதி பெற்ற முதல் வீராங்கனையும் மீராபாய் சானுதான். அதுமட்டுமல்லாமல் பளுதூக்குதல் பிரிவில் மகளிர் பிரிவில் பங்கேற்ற ஒரே வீராங்கனையும் சானு மட்டும்தான். கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்த சானு, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் நாடு திரும்புகிறார்.

இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த மீராபாய் சானு தனது ட்விட்டர் பக்கத்தி்ல் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற என்னுடைய கனவு நனவாகியுள்ளது. என்னுடைய இந்த பதக்கத்தை என்னுடைய தேசத்துக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்து எனக்காகப் பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.

என்னுடைய குடும்பத்துக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவிக்கிறேன். குறிப்பாக என்னுடைய தாய் ஏராளமான தியாகங்களை எனக்காகச்செய்துள்ளார், என் மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ளார். எனக்கு ஆதரவு அளித்த இந்திய அரசு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் அமைப்பு, இந்திய பளூதூக்குதல் அமைப்பு, ரயில்வே, என்னுடைய ஸ்பான்ஸர்கள், என்னுடைய மார்க்கெட்டிங் நிறுவனம் ஆகியோரின் தொடர்ச்சியான ஆதரவுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.

என்னுடைய பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கு சிறப்பு நன்றியும், என்னுடைய குழுவினரின் கடின உழைப்பு, ஊக்கம், பயி்ற்சி ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஒட்டுமொத்த பளூதூக்கும் பிரிவினருக்கும், என்னுடைய தேசத்துக்கும் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். ஜெய் ஹிந்த்.

இவ்வாறு மீராபாய் சானு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x