Last Updated : 24 Jul, 2021 10:29 AM

 

Published : 24 Jul 2021 10:29 AM
Last Updated : 24 Jul 2021 10:29 AM

ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி: தொடர்ந்து 9-வது தொடர்: 12 ஆண்டுக்குப்பின் இலங்கை அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி | படம் உதவி ட்விட்டர்

கொழும்பு 


இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தொடர்ந்து 9-வது முறையாக இந்திய அணி நேற்று கைப்பற்றியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டிலிருந்து இந்திய அணி தொடரை இழக்காமல் இருந்து வருகிறது.

கொழும்பு நகரில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது.

முதலில்பேட் செய்த இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 47 ஓவர்களில் 227 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 38ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 227ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. அதேநேரத்தில் இலங்கை மண்ணில் கடந்த 2009-ம் ஆண்டுக்குப்பின் இந்திய அண்டுக்குப்பின் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

ஏற்ககுறைய 12 ஆண்டுகளுக்குப்பின் அதாவது 2009ம் ஆண்டுஜூலை 24ம் தேதி கடைசியாக இந்திய அணியை ஹம்பனோட்டாவில் நடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை வென்றது.அதன்பின் இந்திய அணியை தங்கள் மண்ணில் வைத்து வெல்ல முடியாமல் இலங்கை தவித்து வந்த நிலையில் 9 ஆண்டுகளுக்குப்பின் இலங்கை அணி வென்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 2021ம் ஆண்டில் இலங்கை அணி விளையாடிய ஒருநாள் போட்டிகளில் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் உலகக் கோப்பை சூப்பர்லீக் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 11-வது இடத்தை இலங்கை பெற்றுள்ளது.

இலங்கை அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர் பெர்னான்டோ, ராஜபக்ச இருவரும் முக்கியக் காரணமாக அமைந்தனர். பெர்னான்டோ 76 ரன்களும், ராஜபக்ச 65 ரன்களும் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

ஆட்டநாயகன் விருது பெர்னான்டோவுக்கும், தொடர்நாயகன் விருது இந்திய வீரர் சூர்ய குமார் யாதவுக்கும் வழங்கப்பட்டது.

இந்திய அணியைப் பொறுத்தவரை அணியில் 6 மாற்றங்களைச் செய்து, 5 வீரர்களை அறிமுகம் செய்தும் எந்தவிதமான பயனும் இல்லை. பிரித்வி ஷா(49), சாம்ஸன்(46), சூர்யகுமார்யாதவ்(40) அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நடுவரிசை வீரர்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறினர்.

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர். டி20 போட்டிகளில் விளையாடிப் பழகி அனைத்துப் பந்துகளையும் பிக் ஷாட் அடிக்கவே ராணா, பாண்டே, பாண்டியா போன்ற வீரர்கள் முயல்கின்றனர்.

இது ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை மிகப்பெரிய தவறாகும். இதுபோன்ற மனநிைல, ஆட்டத்தின் நிலைத்தன்மையை குலைத்துவிடும். அதனால்தான் 157 ரன்களுக்கு 3விக்கெட்டுகளை இழந்து வலிமையான இடத்தில் இருந்த இந்திய அணி, 225 ரன்களுக்குள் ஆட்டமிழந்துள்ளது.

ஹர்திக் பாண்டியா இன்னும் முழுமையாக உடல்தகுதி பெறவில்லை என்று கூறப்படும் நிலையில் அவரை அணியில் வைத்திருப்பதும், பந்துவீசுவதற்கு சிரமப்படுவதும், ஃபாமில்லாமல் தவிப்பதும் தெளிவாகத் தெரிகிறது. இவை தெரிந்திருந்தும் ஹர்திக் பாண்டியாவை அணியில் வைத்திருப்பது ஏனோ எனப் புரியவில்லை.

பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் ஏராளமான தவறுகளைச் செய்த இந்திய அணியினர் 3 முக்கியக் கேட்சுகளையும் தவறவிட்டனர். ராஜபக்சேவுக்கான கேட்சை தவண் பிடித்திருந்தால், மென்டிஸுக்கான கேட்சை பிரித்வி ஷா பிடித்திருந்தால் ஆட்டம் திசை மாறியிருக்கும். டிராப் கேட்சஸ் லாஸ்ட் மேட்சஸ் என்று கூறுவதுண்டு அதுபோல் கேட்சுகளை கோட்டைவிட்டு, போட்டியை இழந்தனர்.

மணிஷ் பாண்டே இந்த தொடர் முழுவதும் வாய்ப்புக் கொடுத்தபோதிலும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு மணிஷ்பாண்டே ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்துள்ளார், அதன்பின் அடிக்கவே இல்லை.

தொடகத்தில் இந்திய அணி சென்ற ரன்ரேட்டைப் பார்த்தபோது, 300 ரன்களை எட்டும் என்று எண்ணப்பட்டது. 23 ஓவர்களில் இந்திய அணி 147 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனால், மழையால் போட்டி நிறுத்தப்பட்டபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியபின் இந்திய அணியின் பேட்டிங்கும் ஆட்டம் கண்டது.

157 ரன்களுக்கு 3 விக்ெகட்டுகளை இழந்திருந்த இந்திய அணி அடுத்த 38 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நடுவரிசை வீரர்கள் மணிஷ் பாண்டே(11), ஹர்திக் பாண்டியா(19) ராணா(7), சூர்யகுமார் யாதவ்(40), கவுதம்(2), ராகுல் சஹர்(13) என வரிசையாக வீழ்ந்தனர்.

இலங்கை சுழற்பந்துவீ்ச்சாளர்கள் ஜெயவிக்ரமா, தனஞ்சயா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் தனஞ்செயா தான் வீசிய கடைசி 5 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தார்.

இலங்கை அணியைப் பொறுத்தவரை பெர்னான்டோ, ராஜபக்ச இருவரும் சேர்ந்து ஆட்டத்தை வெற்றிக்குக் கொண்டு சென்றனர். இருவரும் சேர்ந்து 109 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்து அணியை வழிநடத்தினர். பென்னான்டோ பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 76 ரன்னில் ஆட்டமிழந்தார், ராஜபக்ச 65 ரன்னில் வெளியேறினார்.

நடுவரிசை வீரர்கள் டிசில்வா(2), கருணாரத்னே(3),சனகா(0) சொதப்பியதால் ஆட்டம் திசைதிரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெர்னான்டோவின் பொறுப்பான ஆட்டம் இலங்கைக்கு நீண்ட இடைவெளிக்குப்பின் வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

இந்தியத் தரப்பில் சேத்தன் சக்காரியா 2 விக்கெட்டுகளையும், ராகுல் சஹர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கவுதம், ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x