

அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் பார்ஸிலோனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி, பிளாஸ்டிக் பை ஜெர்ஸியுடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் சிறுவனை சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தானின் காபூல் அருகே ஜகோரி என்ற கிராமத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் முர்டஸா அகமதி. கால்பந்தில் ஆர்வம் கொண்ட முர்டஸா, விவசாயி ஆன தனது தந்தையிடம் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸியின் ஜெர்ஸி வாங்கித் தருமாறு கேட்டான்.
ஆனால் வறுமையின் காரணமாக அவர் வாங்கி கொடுக்க மறுத்தார். இதையடுத்து முர்டஸாவின் மூத்த சகோதரன் ஹோமயூன், பிளாஸ்டிக் பையில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்ஸியை போன்று புளு மற்றும் வெள்ளை நிறத்தை வரைந்து அதில் மெஸ்ஸி 10 என வரைந்து கொடுத்தார். அகமதி அந்த ஜெர்ஸி அணிந்து கால்பந்து விளையாடுவது போன்ற படங்கள் கடந்த மாதம் மத்தியில் முகநூலில் வெளியானது. இதையடுத்து இந்த படமும் அதுதொடர்பான செய்திகள் இணைத்தளங்களில் ‘வைரல்' ஆனது.
இதைப்பார்த்த மெஸ்ஸின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி, சிறுவன் முர்டஸா அகமதிக்கு உதவி செய்ய விரும்புவதாக தெரிவித்தார். இந்நிலையில் சிறுவன் முர்டஸா அகமதியை சந்திக்க லயோனல் மெஸ்ஸி ஆர்வமாக உள்ளதாகவும் இவர்கள் சந்திப்பு விரைவில் நடைபெறும் என ஆப்கானிஸ்தான் கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. அதேவேளையில் சந்திப்புக்கான இடம், தேதி இன்னும் இறுதிசெய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் முர்டஸா அகமதியை சந்திப்பது தொடர்பாக மெஸ்ஸி எங்கள் கால்பந்து சங்கத்தை தொடர்பு கொண்டார். மெஸ்ஸி ஆப்கானிஸ்தான் வந்து முர்டஸாவை சந்திப்பதா அல்லது சிறுவனை ஸ்பெயின் அழைத்து செல்வதா அல்லது மூன்றாவது நாடு ஒன்றில் இருவரது சந்திப்பையும் நடத்துவதா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக ஆப்கன் கால்பந்து சங்க செய்தி தொடர்பாளர் சயத் அலி காஸிமி தெரிவித்தார்.
ஆனால் இதுதொடர்பாக பார்ஸிலோனா நிர்வாகம் தரப்பில் எந்த கருத்தும் உடனடியாக தெரி விக்கப்படவில்லை. ஆப்கானிஸ் தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் மெஸ்ஸி வருகையின் போது பாதுகாப்பு பிரச்சினை எழும். இதனால் ஐரோப்பிய நாடுகளில் சிறுவனின் சந்திப்பை நடத்துவதே நல்லது என காபூலில் உள்ள ஸ்பெயின் தூதரகம் கூறியுள்ளது.