Published : 15 Jul 2021 04:41 PM
Last Updated : 15 Jul 2021 04:41 PM

அப்படித்தான் ரன் அவுட் செய்வேன்; என் பெற்றோரிடம் சொல்லிவிடாதீர்கள்: அஸ்வின் கிண்டல் 

பந்து வீசுவதற்கு முன் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியேறினால் அந்த பேட்ஸ்மேனைக் கண்டிப்பாக ரன் அவுட் ஆக்குவேன் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

பந்துவீச்சாளர், பந்தைத் தன் கையிலிருந்து வீசும் முன், அவர் பக்கம் இருக்கும் பேட்ஸ்மேன் க்ரீஸைத் தாண்டி வந்தால் ரன் அவுட் செய்வதே மன்கட். மன்கட் அவுட் என்று சொல்லப்படும் இந்த ரன் அவுட் முறை கிரிக்கெட் விளையாட்டில் விதிமுறைகளின்படி சரியானதே. ஆனால், அப்படிச் செய்வது விளையாட்டின் போட்டி மனப்பான்மைக்கு எதிரானது என்ற கருத்து பரவலாக உள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் ஒருசில முறை இப்படியாகப் பந்துவீச்சாளர்கள் சில பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர். அப்படி அஸ்வின், ஒரு ஐபிஎல் ஆட்டத்தின்போது, தன் முனையிலிருந்த ஜாஸ் பட்லர் க்ரீஸை விட்டு வெளியேறுவதைக் கவனித்து, பந்து வீச்சுக்கு முன் அவரை ரன் அவுட் செய்தார். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.

இன்று வரை அஸ்வின் செய்தது சரியா, தவறா என்ற விவாதம் கிரிக்கெட் உலகில் நடைபெற்று வருகிறது. ஆனால், அஸ்வின் தான் செய்தது விதிமுறைகளின் படி சரியே என்பதால், தனது நம்பிக்கையில் உறுதியுடன் இருக்கிறார்.

அஸ்வின் டெல்லி அணிக்காக விளையாடியபோது அந்த அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங், இதுபோல ரன் அவுட் செய்வதைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது. அஸ்வினுடன் கண்டிப்பாக இதுபற்றிப் பேசுவேன் என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து அஸ்வினும் பாண்டிங்கும் இதுகுறித்து தொலைபேசியில் உரையாடியது அஸ்வினின் யூடியூப் சேனலில் பகிரப்பட்டது.

கடந்த வருடமும் ஒரு ரசிகர் இதுகுறித்து அஸ்வினிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு அவரும் பதிலளித்திருந்தார். தற்போது, 92-93ஆம் வருடம், இந்திய அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் நடந்த சம்பவத்தை ஒரு பயனர் பகிர்ந்திருந்தார்.

இந்தக் காணொலியில் கபில்தேவ் பந்துவீசுவதற்கு முன் எதிர்முனையில் இருக்கும் கேர்ஸ்டன் க்ரீஸை விட்டு வெளியேற கபில்தேவ் அவருக்கு எச்சரிக்கை செய்கிறார். இதற்கு அடுத்த ஆட்டத்தில் இதேபோல பந்துவீசுவதற்கு முன் எதிர்முனையில் நின்றுகொண்டிருந்த வெஸல்ஸ் க்ரீஸை விட்டு சில அடி எடுத்து வைக்க, கபில்தேவ் அவரை ரன் அவுட் செய்கிறார்.

இதற்கு பதிலளித்திருக்கும் ஒரு பயனர், கபில்தேவ் செய்தது சரியே. எச்சரித்துவிட்டுத் தான் அவுட் ஆக்கினார் என்று கூறி இந்தப் பதிலில் அஸ்வினையும் டேக் செய்திருந்தார்.

இதற்கு, "பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியேறினால் இதை நான் மீண்டும் செய்வேன். அதற்காக உங்களிடம் அனுமதி கோரிக் கொள்கிறேன். ஏனென்றால் அப்படி ஒரு பேட்ஸ்மேனை அவுட்டாக்க வேண்டுமென்றால் அதை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். நீங்கள் இதுகுறித்து என் பெற்றோரிடம் சொல்லாமல் ஆமோதிப்பீர்கள் என்று நினைக்கிறேன்" என அஸ்வின் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x