Published : 13 Jul 2021 06:31 PM
Last Updated : 13 Jul 2021 06:31 PM

யஷ்பால் சர்மா மறைவு: பிரதமர், குடியரசுத் தலைவர், முன்னாள் வீரர்கள் இரங்கல்

இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த நாயகர்களில் ஒருவர் யஷ்பால் சர்மா என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் 1983-ல் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தவருமான யஷ்பால் சர்மா செவ்வாய்க்கிழமை காலை மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 66.

யஷ்பால் சர்மா மறைவுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மாவின் மறைவுச் செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தேன். 1983 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், முக்கியமான போட்டிகளில் அவரது அற்புதமான ஆட்டம், கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் பெருமைக்குரிய வெற்றிக்கு முக்கியப் பங்காக இருந்தது. அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், அணி வீரர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.

பிரதமர் நரேந்திர மோடி: இந்திய கிரிக்கெட் அணியில் சகாப்தம் படைத்த 1983 அணியோடு சேர்த்து ஸ்ரீ யஷ்பால் சர்மாவும் மிகவும் விருப்பத்துக்குரிய நபராக இருந்தார். அவரது சக வீரர்களுக்கு, ரசிகர்களுக்கு, வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு உந்துதலைத் தந்தவர். அவரது மறைவால் கலங்கினேன். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் அனுதாபங்கள். ஓம் சாந்தி.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: எனது முன்னாள் சக வீரர், நண்பர் யஷ்பால் சர்மாவின் மரணம் குறித்துக் கேள்விப்பட்டதும் வருத்தமாக உள்ளது. 1983 உலகக் கோப்பையை நாங்கள் வெல்லக் காரணமாக இருந்த முக்கியமான நாயகர்களில் ஒருவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

ரவி சாஸ்திரி: இவ்வளவு சீக்கிரம் உலகக் கோப்பை புகழ்பெற்ற எனது சக வீரரை இழந்ததில் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளேன். அவரது குடும்பத்துக்கு என் இரங்கல்கள். அவரது ஆன்மாவைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

வெங்கடேஷ் பிரசாத்: 1983 உலகக் கோப்பை வெற்றியாளர் யஷ்பால் சர்மாவின் மறைவு பற்றித் தெரிந்து கொண்டதில் மனமுடைந்து போனேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் மனமார்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி.

சச்சின் டெண்டுல்கர்: யஷ்பால் சர்மாவின் மரணம் அதிர்ச்சியையும், வலியையும் தந்துள்ளது. 1983 உலகக் கோப்பையில் அவர் ஆட்டத்தைப் பார்த்த இனிய நினைவுகள் இன்னும் எனக்கு உள்ளன. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய பங்கு என்றும் நினைக்கப்படும். ஒட்டுமொத்த சர்மா குடும்பத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.

யுவராஜ் சிங்: யஷ்பால் சர்மாவின் திடீர் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தத்தைத் தந்தது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கும், நெருக்கமானவர்களுக்கும் என் இரங்கல்கள்.

வீரேந்திர சேவாக்: யஷ்பால் சர்மா மறைந்தது குறித்துக் கேள்விப்பட்டு வருந்தினேன். நமது 1983 உலகக் கோப்பை வெற்றி நாயகர்களில் ஒருவர். மனமார்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.

முனாஃப் படேல்: யஷ்பால் சர்மாவின் மறைவைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்துக்கு மனமார்ந்த இரங்கல்கள்.

ப்ரக்யான் ஓஜா: இந்த சில வருடங்கள் அனைவருக்குமே கடினமானதாக இருந்து வருகிறது. இன்றும் அதில் மாற்றமில்லை. யஷ்பால் சர்மாவின் மரணத்தால் வருத்தமடைந்திருக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.

இவ்வாறு அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x