Last Updated : 06 Jul, 2021 03:55 PM

 

Published : 06 Jul 2021 03:55 PM
Last Updated : 06 Jul 2021 03:55 PM

கரோனா பிடியில் இங்கிலாந்து அணி ஒட்டுமொத்தமாகத் தனிமை: பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி

இங்கிலாந்து ஒருநாள் அணியில் உள்ள 3 வீரர்கள், ஊழியர்கள் 4 பேர் என 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக வியாழக்கிழமை தொடங்கவுள்ள 3 ஒரு நாள், டி20 போட்டித் தொடருக்கான புதிய அணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இன்று அறிவிக்கப்படும்.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. வியாழக்கிழமை தொடங்கும் இந்தத் தொடர் ஜூலை 13-ம் தேதி முடிகிறது.

இந்தச் சூழலில் இங்கிலாந்து வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 3 வீரர்களுக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, அணியில் உள்ள உதவியாளர்கள், ஊழியர்கள் 4 பேருக்கும் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஒருநாள் அணியில் இருந்த அனைத்து வீரர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு கை விரலில் ஏற்பட்ட காயம் குணமடைந்து அணிக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து, இளம் வீரர்கள், கவுண்ட்டி வீரர்களை வைத்துப் புதிய அணியை இன்று அவசரமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிக்க உள்ளது.

பாகிஸ்தானுடனான ஒருநாள், டி20 தொடர் திட்டமிட்டபடி நடந்தே தீரும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என இங்கிலாந்து வாரியம் தெரிவித்துள்ளது.

ஸ்கை ஸ்போர்ஸ்ட் சேனலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாம் ஹாரிஸன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''டெல்டா உருமாற்ற கரோனா வைரஸ் பரவி வருவதால், அதை மனதில் வைத்து நாம் அதற்குத் தயாராக இருக்கிறோம். இதற்காக நாங்கள் மிகக் கடுமையான பயோ-பபுள் சூழலை உருவாக்கியுள்ளோம். வீரர்கள், ஊழியர்கள் நலனுக்காகவே கடுமையான கரோனா தடுப்பு விதிகளையும் உருவாக்கியுள்ளோம்.

திட்டமிட்டபடி பாகிஸ்தானுடன் தொடர் நடைபெறும். விரைவில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். இங்கிலாந்தில் உள்ள முதல்தர அணியில், கவுண்டி அணியில் விளையாடிவரும் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்பு அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்து வந்த நிலையில் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x