Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM

லயோனல் மெஸ்ஸி அசத்தல் ஆட்டம்: அரை இறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் ஈக்வேடார் அணிக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டத்தால் அர்ஜென்டினா 3-0என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

பிரேசிலின் கோயானியா நகரில்நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 26-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கம்பத்தின் மீது பட்டு விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது. 37-வது நிமிடத்தில் ஈக்வேடார் அணி வீரர் வெலன்சியா தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமாக விலகிச் சென்றது.

40-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நிக்கோலா கோன்சலஸ் இலக்கை நோக்கி பந்தை விரைவாக கடத்திச் சென்றார். அப்போது ஈக்வேடார் அணியின் கோல்கீப்பர் கலிண்டெஸ் தனது நிலையில் இருந்து முன்னேறி வந்து பாய்ந்தபடி கோன்சலஸை இடைமறித்தார். அப்போது பந்து பக்கவாட்டில் இருந்த மெஸ்ஸியின் வசம் சென்றது. அவர், இலக்குக்கு அருகில் நின்ற ரோட்ரிகோ டி பாலுக்கு தட்டிவிட்டார். அதை ரோட்ரிகோ டி பால் எளிதாக கோலாக மாற்ற முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.

ஆட்டம் முடிவடைய 6 நிமிடங்கள் இருந்த நிலையில் அர்ஜென்டினா மேலும் இரு கோல்கள் அடித்தது. 84-வது நிமிடத்தில் பாக்ஸின் மையப்பகுதிக்குள் லயோனல் மெஸ்ஸி லாவகமாக தட்டி விட்ட பந்தை பெற்ற மார்டினெஸ் கோல் அடித்து அசத்தினார். 88-வது நிமிடத்தில் பாக்ஸ் பகுதிக்குள் பந்தை விரைவாக கடத்திச் சென்ற அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியாவை ஈக்வேடார் வீரர் பியோரோ ஹின்காபி தள்ளிவிட்டார்.

இதனால் பியோரோ ஹின்காபிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. தொடர்ந்து வழங்கப்பட்ட ப்ரீகிக் வாய்ப்பில் லயோனல் மெஸ்ஸி கோல் அடிக்க அர்ஜென்டினா 3-0என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் கொலம்பியா அணி பெனால்டி ஷுட் அவுட்டில் 4-2 என்ற கோல்கணக்கில் உருகுவேயை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x