Last Updated : 29 Jun, 2021 06:11 AM

 

Published : 29 Jun 2021 06:11 AM
Last Updated : 29 Jun 2021 06:11 AM

விளையாட்டாய் சில கதைகள்: விம்பிள்டன் டென்னிஸின் வரலாறு

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்போட்டியைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம்:

உலகின் பழமையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், 1877-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் ஆண்களுக்கான பிரிவில் மட்டுமே போட்டி நடத்தப்பட்டது. பின்னாளில் 1884-ம் ஆண்டுமுதல் பெண்கள் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. புல்தரையில் நடத்தப்படும் ஒரே கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி இதுவாகும். இம் மைதானத்தில் உள்ள புற்கள் 8 மில்லிமீட்டர் உயரத்துக்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மற்ற டென்னிஸ் போட்டிகளில் எல்லாம், எந்த நிறத்தில் வேண்டுமானாலும் வீரர்களும் வீராங்கனைகளும் உடை அணியலாம். ஆனால் விம்பிள்டன் போட்டியைப் பொறுத்தவரை வெள்ளை நிறத்தில் மட்டும்தான் உடை அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. ஒவ்வொரு விம்பிள்டன் போட்டியிலும் 54,250 ஸ்லாசெங்கர் வகைப் பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. 7 புள்ளிகளுக்கு ஒருமுறை பந்துகள் மாற்றப்படுகின்றன. ஆரம்ப காலகட்டத்தில் வெள்ளை நிறப் பந்துகள்தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கேமராவில் பந்துகள் தெளிவாகத் தெரியவேண்டும் என்பதற்காக 1986-ம் ஆண்டுமுதல் மஞ்சள் நிறப் பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

விளையாட்டுப் போட்டிகளிலேயே அதிக அளவில் உணவு விற்பனையாவது விம்பிள்டன் போட்டிகளில்தான். ஒவ்வொரு ஆண்டும் விம்பிள்டன் போட்டிகளின்போது 2.34 லட்சம் எண்ணிக்கையில் இரவு மற்றும் மதிய உணவுகள், 3.3 லட்சம் கோப்பை தேநீர் மற்றும் காபி, 10 ஆயிரம் லிட்டர் பால், 29 ஆயிரம் பாட்டில் ஷாம்பெயின் ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x