Published : 22 Jun 2021 12:45 PM
Last Updated : 22 Jun 2021 12:45 PM

இறுதிப் போட்டியில் கோப்பையைப் பகிர்ந்தளிப்பதா?- புதிய முறையைக் கடைப்பிடியுங்கள்: ஐசிசிக்கு கவாஸ்கர் வலியுறுத்தல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் வெற்றியாளரை அறிவிப்பதில் புதிய முறையைப் புகுத்துவது குறித்து ஐசிசி சிந்திக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களால் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. தொடர் விக்கெட்டுகள் சரியவே மொத்தம் 217 ரன்களுக்குத் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி நிறைவு செய்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்திருந்தது. திங்கட்கிழமை தொடங்கவிருந்த நான்காம் நாள் ஆட்டம் மழையால் தாமதமானது. நான்காம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் ஐந்தாம் நாளான இன்று இந்தியா - நியூஸிலாந்து இடையேயான ஆட்டம் டிராவில் முடியும் வாய்ப்பே அதிகம் உள்ளது. ஒருவேளை ஆட்டம் டிராவில் முடிந்தால் வெற்றியாளரை அறிவிப்பதில் புதிய உத்தியைப் புகுத்துவதை ஐசிசி சிந்திக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், “நிலைமையைப் பார்க்கும்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி டிராவில் முடிந்து, கோப்பை பகிர்ந்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டியில் கோப்பையைப் பகிர்ந்தளிப்பது இதுவே முதல் முறை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதற்குப் புதிய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஐசிசியின் கிரிக்கெட் கமிட்டி சிந்தித்து பின்னர் ஒரு முடிவை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x