Published : 21 Jun 2021 07:41 PM
Last Updated : 21 Jun 2021 07:41 PM

கைவிடப்பட்ட 4ஆம் நாள் ஆட்டம்: மழையால் சுவாரசியம் இழக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி

தொடர் மழையின் காரணமாக இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஏற்கெனவே முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களால் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. தொடர் விக்கெட்டுகள் சரியவே மொத்தம் 217 ரன்களுக்குத் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி நிறைவு செய்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்திருந்தது. ஆட்டம் நடந்த இரண்டு நாட்களுமே ஒளி மங்கியதாலும், மழையாலும் ஆட்டம் தடைப்பட்டு வந்தது.

இந்நிலையில் கனமழை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. மழையின் தீவிரம் சற்று குறைந்தாலும் மிதமான மழையின் காரணமாக மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்தபாடில்லை.

உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை என நேரம் கடந்துகொண்டே வந்ததால் ஒரு கட்டத்தில் 4ஆம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமும் பகிர்ந்துள்ளது.

நாளைய ஆட்டத்தைப் பொறுத்து மதியத்துக்கு மேல் இருப்பு நாளில் (reserve day) ஆட்டம் நடக்குமா என்பது குறித்து நடுவர்கள் முடிவெடுப்பார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x