Published : 21 Jun 2021 03:13 AM
Last Updated : 21 Jun 2021 03:13 AM
இந்தியாவுக்கு கபில்தேவ் எப்படியோ, அப்படித்தான் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கியமான, நம்பர் 1 ஆல்ரவுண்டராக ஒரு காலத்தில் இயான் போத்தம் விளங்கினார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கிய போத்தம், 3 ஆயிரம் ரன்களையும், 300 விக்கெட்களையும் மிக விரைவாக எடுத்த முதல் ஆல்ரவுண்டர் ஆவார். கிரிக்கெட் உலகில் நீண்டகாலம் ஆட்சி செய்த இயான் போத்தம், இவ்விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற நாள் ஜூன் 21, 1992.
இங்கிலாந்தில் உள்ள ஹெஸ்வெல் எனும் ஊரில் 1955-ம் ஆண்டு இயான் போத்தம் பிறந்தார். ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டிருந்த இயான் போத்தம், பின்னர் கிரிக்கெட்டில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். ‘நான் பெரியவன் ஆனதும், மற்றவர்கள் என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்கும் அளவுக்கு புகழ்பெறுவேன்’ என்பதில் இயான் போத்தம் தன்னம்பிக்கையுடன் இருந்துள்ளார். இதனால், சிறுவயதிலேயே விளையாட்டு நேரங்களில் சின்னச் சின்ன காகிதங்களில் ஆட்டோகிராஃப் போட்டு அவர் பழகிவந்ததாக, போத்தமின் தாயார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தன் வாழ்நாளில் 102 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இயான் போத்தம், 5,200 ரன்களை குவித்ததுடன் 383 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 116 ஒருநாள் போட்டிகளில் 2,113 ரன்களை குவித்து, 145 விக்கெட்களை எடுத்துள்ளார். இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. உலகக் கோப்பையைவிட இந்த தொடரில் வெல்வதை இரு நாடுகளும் முக்கியமாக கருதுகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து அணி 3 ஆஷஸ் தொடர்களை வெல்ல இயான் போத்தம் முக்கிய காரணமாக இருந்துள்ளார். இத்தொடரில் 399 ரன்களை எடுத்துள்ள இயான் போத்தம், 34 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT