Published : 18 Jun 2021 03:13 AM
Last Updated : 18 Jun 2021 03:13 AM
1983-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கபில்தேவ் 175 ரன்களைக் குவித்த நாள் ஜூன் 18.
அன்றைய தினம் டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேட்டிங் செய்யச் சென்றதும், கபில்தேவ் குளிக்கச் சென்றுள்ளார். அவர் குளித்துக்கொண்டு இருக்கும்போது பாத்ரூமின் கதவு தட்டப்பட்டுள்ளது.
இந்தியா 6 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்ததாக கூறிய அவரது சகாக்கள், உடனடியாக பேடைக் கட்டி தயாராகுமாறு கபில்தேவிடம் கூறியுள்ளனர். அவர் தயாராவதற்குள் மேலும் 2 விக்கெட்கள் விழுந்துவிட்டன. இந்திய அணி 17 ரன்களை எட்டுவதற்குள் 5 விக்கெட்கள் வீழ்ந்துவிட்டன. இந்த நிலையில் அணியைக் காக்கும் முயற்சியில் கபில்தேவ் ஈடுபட்டார்.
6-வது விக்கெட் ஜோடியாக கபில்தேவுடன் இணைந்த பின்னி 22 ரன்களைச் சேர்க்க இந்திய அணி ஓரளவு மீண்டது. ஆனால் அதன்பிறகு மீண்டும் விக்கெட்கள் சரிய, இந்திய அணி மீண்டும் துவண்டது. ஆட்டம் அவ்வளவுதான் என்று எல்லோரும் நினைக்க, கபில்தேவ் மட்டும் கலங்காமல் நின்றார். விக்கெட் கீப்பர் கிர்மானியின் (24 ரன்கள்) உதவியுடன் தனி நபராய் அணியை மீட்டார். அன்றைய தினம் அவுட் ஆகாமல் அவர் குவித்த 175 ரன்கள் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரித்தது. உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதிபெறவும் அது காரணமாக மாறியது.
அன்றைய தினம் பிபிசி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், கபில்தேவின் ஆக்ரோஷ ஆட்டத்தை யாரும் வீடியோவில் பதிவு செய்யவில்லை என்பது மிகப்பெரிய சோகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT