Last Updated : 15 Jun, 2021 03:12 AM

 

Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: இந்தியாவின் புதிய நம்பிக்கை

டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் புதிய நம்பிக்கையாக விளங்கும் மணிகா பத்ராவின் பிறந்தநாள் இன்று (ஜூன் 15).

1995-ம் ஆண்டு டெல்லியில் பிறந்த மணிகா பத்ரா, தனது 5 வயது முதல் டேபிள் டென்னிஸ் போட்டியில் பயிற்சி பெற்று வருகிறார். தனது மூத்த சகோதரிகள் இருவர் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஆடுவதைப் பார்த்துதான் மணிகா முதலில் டேபிள் டென்னிஸ் ஆட வந்துள்ளார். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் இருவரையும் விட மிகச் சிறந்த வீராங்கனையாக அவர் உருவெடுத்துள்ளார். ஆரம்பத்தில் டெல்லியில் நடந்த உள்ளூர் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்துவந்த மணிகா பத்ரா, தனது 15-வது வயதிலேயே தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். டேபிள் டென்னிஸ் போட்டிக்காக ஒரு கட்டத்தில் தனது கல்லூரிப் படிப்பையே தியாகம் செய்துள்ளார் மணிகா.

புகழ்பெற்றவராக விளங்க வேண்டும், தொலைக்காட்சிகளில் தனது முகம் தெரிய வேண்டும் என்பது மணிகா பத்ராவின் சிறுவயது ஆசை. இதற்காக அவர் டேபிள் டென்னிஸ் விளையாட்டுடன் மாடலிங் செய்வதிலும் கவனம் செலுத்திவந்தார். ஆனால் இந்த 2 துறைகளில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தினால் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும் என்ற நிலை வந்தபோது மாடலிங்கை கைவிட்ட அவர், டேபிள் டென்னிஸில் தனது கவனத்தைச் செலுத்தினார்.

2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கால் இறுதிவரை முன்னேறிய மணிகா பத்ரா, அதில் தோல்வியடைந்து பதக்கத்தை தவறவிட்டார். ஆனால் அதற்கு ஈடுசெய்யும் வகையில் 2018-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும் 2018-ல்நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x