Last Updated : 13 Jun, 2021 03:11 AM

 

Published : 13 Jun 2021 03:11 AM
Last Updated : 13 Jun 2021 03:11 AM

விளையாட்டாய் சில கதைகள்: 3 மாதம் அவகாசம் கேட்ட தீபிகா

இந்தியாவின் முன்னணி வில்வித்தை வீராங்கனையான தீபிகா குமாரியின் பிறந்தநாள் இன்று (ஜூன் 13).

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ரடு சாட்டி என்ற சிறு நகரத்தில் பிறந்தவர் தீபிகா குமாரி. அவரது அப்பா சிவநாத் மஹதோ, ஒரு ஆட்டோ டிரைவர். அம்மா கீதா மஹதோ நர்ஸாக இருந்தார்.

பள்ளி விடுமுறைக் காலங்களில் தீபிகா குமாரி, தனது பாட்டியின் வீட்டுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு ஒருமுறை சென்றிருந்தபோது, அங்கிருந்த தீபிகாவின் உறவினர் ஒருவர், தான் வில்வித்தை பயில்வதாக கூறியுள்ளார். இதற்காக அவர் வைத்திருந்த வில் மற்றும் அம்புகளைக் காட்டினார். இதைப் பார்த்ததும் தீபிகா குமாரிக்கும் வில் வித்தையில் ஆர்வம் ஏற்பட்டது. தனது உறவினரின் உதவியுடன் அவரும் வில்வித்தைப் பயிற்சியில் சேர்வதற்காக சென்றார்.

ஆரம்பத்தில் அங்கிருந்தவர்கள் அவரைச் சேர்க்க மறுத்தனர். இதைத்தொடர்ந்து தீபிகா குமாரி, “எனக்கு 3 மாதம் அவகாசம் கொடுங்கள். இந்த காலகட்டத்தில் நான் சிறப்பாக பயிற்சி பெறாவிட்டால் என்னை பயிற்சி மையத்தில் இருந்து நீக்கிவிடுங்கள்’’ என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர்களும், தீபிகா குமாரியை வில்வித்தை பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளனர்.

அங்கு சில காலம் பயிற்சி பெற்ற தீபிகா குமாரி, அதன்பிறகு டாடா நிறுவனம் நடத்திய பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். அங்குதான் அவரது திறமைகள் கூர்தீட்டப்பட்டன.

டாடா பயிற்சி மையத்தில் பெற்ற பயிற்சியால் 2009-ம் ஆண்டு நடந்த உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் பட்டம் வென்றார். இதன்மூலம் இப்பட்டத்தை வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இதன்பிறகும் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பட்டங்களையும், பதக்கங்களையும் வென்று இந்தியாவின் முன்னணி வில்வித்தை வீராங்கனையாக தீபிகா குமாரி விளங்குகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x